×

கதி கலங்கி இருப்பவருக்கு நல்வழி காட்டும் மார்கினிதேவி

அம்பிகைக்கு சேவகம் செய்யும் பல்லாயிரம் கோடி யோகினிகளில் முதன்மையானவளாக கருதப்படுபவள் இந்த மார்க்கினிதேவி. `மார்க்கம்’ என்றால் வழி என்று பொருள். ஆன்மிக வாழ்வில் ஞானத்தை தேடி அலையும் சாதகனுக்கு, நல்ல வழியை காட்டுபவள் இந்த யோகினி என்பதால், இவளுக்கு `மார்கினி’ என்று பெயர். பெரும் யோகிகளும்கூட மனதை அடக்கி ஆழ்ந்த தியானமும் தவமும் செய்யப் படாதபாடுபடுகிறார்கள். அவர்களுக்கு மனதை கட்டுப்படுத்தும் ஆற்றலைத் தருபவள் இந்த யோகினி.

இந்த யோகினியின் அருள் இருந்தால், மனம் அலைபாயாமல் ஒருநிலைப்பாடோடு இருக்கும். வாழ்க்கையில் பலவிதமான துன்பங்களை அனுபவித்தவர்களுக்கு துன்பத்தை மாற்றி இன்பத்தை சேர்க்கிறாள். வெற்றிப்பாதையில் இருக்கும் தடைகளை நீக்கி, வெற்றிக்கனியை எட்ட வைக்கிறாள் இந்த யோகினி. குறிப்பால் உணர்த்தும் யோகினி. ஒரு மனிதனின் வாழ்வில் வர இருக்கும் நல்ல வாய்ப்புகளையும், அதை பயன்படுத்திக்கொள்ள தேவையான விஷயங்களையும் குறிப்பால் உணர்த்தி, உபாசகனை வாழ்வில் உயர்த்துகிறாள் இந்த யோகினி.ஒரு உபாசகனின் கர்ம வினைப்படி அவனுக்கு கிடைக்க வேண்டியதை, அவனுக்கு கிடைக்க வைக்கிறாள். உபாசகனின் ஞானத்தை, தாமச இருட்டில் அதாவது அறியாமையில் இருந்து ஞான ஒளியை நோக்கி முன்னேறிச் செல்ல உதவுகிறாள்.

பயங்கரமான உருவம் ஏன்?

இந்த யோகினியின் உருவம் அதிபயங்கரமாக இருப்பதை நாம் கவனிக்கலாம். ஒரு ஆழ்கடல் கரையில் அலை அலையாகப் புரண்டு எழுந்து சலனத்தோடேயே இருக்கும். ஆனால் அந்த சலனம் மிக்க அலைகளைக் கடந்து ஆழ்கடலை அடையும் பொழுது அங்கே ஒரு அமைதியை நம்மால் உணர முடியும். மனிதனின் மனமும் இப்படித்தான். கடல் போன்ற மனிதனின் மனதில் பல விதமான எண்ண அலைகள் தோன்றிக் கொண்டே இருக்கிறது. இந்த எண்ணங்களை எல்லாம் கடந்து மனதை ஒருமுகப்படுத்தும் போது, பயங்கரமாக பலவாறாக பாவங்களை யோசித்த மனம், சாந்தமாகிப்போகிறது. அதைக் குறிக்கவே இந்த யோகினி அதிபயங்கரமாகவும், அதே சமயம் அருகு நெருங்கி வந்த உபாசகர்களுக்கு அதி அற்புதமாகவும் அருள் செய்கிறாள்.

நான்கு கரங்களும் ஆயுதங்களும்

இந்த தேவி, நான்கு கரங்களைக் கொண்டு காட்சி தருகிறாள். அதில் ஒரு கரத்தில் ஒரு வெற்றுக் கபாலம் இருக்கிறது. உள்ளே ஒன்றும் இல்லாத வெறும் மண்டையோடு, ஆணவம் முற்றும் அழிந்த மனிதனின் யோகநிலையை குறிக்கிறது. நான் எனது என்னுடைய என்ற ஆணவ எண்ணம் அழியும் இடத்தில்தான் ஞானம் தோன்றுகிறது. இதை உணர்த்தவே இந்த யோகினி வெறும் கபாலத்தை தாக்குவதாக சொல்லப்படுகிறது. மனிதனின் நாபிக்கு ஒரு அங்குலம் மேல், கீழ் நோக்கிய தாமரை வடிவில் ஒரு வெற்றிடம் இருக்கிறது.

இதை உபநிஷத்துக்கள் வெகு அழகாக சொல்கிறது. இதற்கு `தகராகாசம்’ என்று பெயர். இங்குதான் மனிதனின் ஆன்ம வடிவில் இறைவன் இருப்பதாக சொல்லப்படுகிறது. மனிதனின் இதயக்கமலத்தில் இருக்கும் தகராகாசத்தில் இருக்கும் ஆன்மாவை உணர, சித்தம் சுத்தமாக இருக்க வேண்டும்.தீய எண்ணங்கள் எதுவும் இன்றி, இறைவனைத் தவிர வேறு எதையும் உணராத நிலையில் மனமும், புத்தியும், சித்தமும், வெற்றிடம் ஆகும் இடத்தில், மனிதன் தன்னுள்ளே இருக்கும் ஆன்ம வடிவான பரமனை உணர்கிறான். இதை உணர்த்தவே இந்த யோகினி கையில் ஒரு காலி கபாலத்தை தாங்குகிறாள்.

கையில் சூலம் ஏன்?

சூலத்தின் மூன்று கூர்முனைகள் மூன்று காலங்களை குறிக்கும். முக்காலத்தையும் அறியும் ஞானத்தை இந்த தேவி தருகிறாள் என்பதை இது காட்டுகிறது. அதே போல சூலத்தின் மூன்று கூர்முனைகள், சத்துவம், ராஜஸம், தாமசம் என்ற மூன்று குணங்களைக் குறிக்கும். இந்த மூன்று குணங்களையும் கடந்த பரம்பொருள் ஒருவர்தான் என்பதை அதனுடைய நீண்ட உடல் குறிக்கும். இப்படி அனைத்துக் குணங்களையும் கடந்து இருக்கும் இறைவனின் ஞானத்தை தருபவள் இந்த யோகினி என்பதால், கையில் சூலத்தை தாங்கி இருக்கிறாள்.

கையில் தண்டம் ஏன்?

தண்டம் என்பது காலத்தை குறிக்கிறது. யமன் கையில் கால தண்டம் இருப்பதை நாம் கவனிக்கலாம். அம்பிகையின் படைத் தலைவியான வாராஹிதேவிக்கு தண்டநாதை என்ற திருநாமம் உண்டு. படையை நடத்தும் அதிகாரம் உடையவள் என்பதாலும், கையில் தண்டம் தாங்கி இருப்பதாலும், வாராஹிக்கு அந்த நாமம் ஏற்பட்டதாகச் சொல்லுவதுண்டு. இந்த யோகினியின் கையில் இருக்கும் தண்டம், இந்த யோகினி உபாசகனுக்கு அதிகாரத்தையும், கால அனுகூலத்தையும் தருவதை குறிக்கிறது.

வெற்றுக் கபாலத்தின் தத்துவம்

மார்கினி தேவியைப் பொறுத்தவரையில், காலியான கபாலம் ஆரவாரமில்லாத அமைதியைத் தெரிவிக்கிறது. வெற்றுக் கபாலத்தில் தெய்வீக சக்திகள் அலை அலையாகப் பரவி சாதகரை ஆக்கிரமித்துக் கொள்ளும். அந்த அலைகள் அவர் மூலமாக அவரது இருப்பிடம் முழுவதும் வியாபிக்கும். இதனால் அவரைச் சுற்றி சர்வ மங்கலங்களும் ஏற்படும். எப்போதும் அமைதி நிலவும், குழப்பமில்லாத மனநிலை இருக்கும்.

யோகிகளின் அனுபவம்

இந்த யோகினியை வழிபடும் யோகிகள் ஒரு புதிய தெய்வீக உணர்வில் எப்போதும் திளைத்திருப்பார்கள். அவர்களைச் சுற்றி ஒரு தெய்வீக அலைவரிசை எப்போதும் இருக்கும். இந்த யோகினியின் காலடியில் ஒரு குள்ளநரி காணப்படுகிறது. காட்டின் மூலை முடுக்கு அனைத்தும் குள்ளநரிக்குத் தெரியும். அதுபோல, நமது வாழ்வின் அத்தனை பகுதிகளையும் ஒரு சேரத் தெரிந்தவள் மார்கினிதேவி.

பல ஞான நூல்களை ஆராய்ந்து அறிந்த ஞானத்தை கொடுக்க வல்லவள் இந்த தேவி என்பதால், இவளுக்கு குள்ளநரி வாகனமாக இருக்கிறது. குள்ளநரித் தந்திரத்தில் சிறந்தது. சாமர்த்தியம் மிகுந்தது, எப்பாடுபட்டாவது தனது குட்டிளைக் காப்பாற்ற வல்லது. அது போலவே தேவியும் உபாசகர்களை துன்பங்களில் இருந்து காப்பாள், எத்தகைய ஆபத்திலும் உடன்வந்து உதவி செய்வாள், சங்கடங்களைச் சமாளிக்கும் சமயோசித புத்தியை அருள்வாள்.

ஜி.மகேஷ்

Tags : Marginidevi ,Markini Devi ,Ambika ,Marginie ,
× RELATED பக்தனுக்காக பகவானே செய்த நீத்தார்கடன்!