×

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி

பிரம்மனின் கர்வத்தை அடக்குவதற்காக ஈசன் பிரம்மனின் ஐந்தாவது தலையை பிய்த்துப் போட்டார். பிரம்மனின் தலையை கொய்த பாவமும், சரஸ்வதியின் சாபமும் ஈசனைத் துரத்தின. திருவோடு ஏந்தி பசியோடு ஈசன் அலைந்தார். இத்தலத்தில்தான் புற்றுருவாக பார்வதி எழுந்தருளி பிரம்ம கபாலத்தை ஈசனிடமிருந்து பறித்து சாப நிவர்த்தி பெற்றுத் தந்தாள்.

எளிமையான மக்களிடையே அவர்களுக்குள் ஒருத்தியா அங்காளம்மன் புற்றுக்கு பின்னால் எழுந்தருளியிருக்கிறாள். பிரதி அமாவாசையன்று பல லட்சம் பக்தர்கள் இங்கு கூடுவார்கள். திண்டிவனம் – செஞ்சி சாலையின் நடுவே பிரியும் சாலையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. சகல தோஷங்களையும் சிதறடிக்கும் சீரியவள் இவள்.

கோவை – சௌடாம்பிகை

ஈசனின் ஆணைப்படி தேவலன் எனும் முனிவர் திருமாலை நோக்கி தவமிருந்தார். அசுரர்கள் அவரை தொந்தரவு செய்த வண்ணம் இருந்தனர். அவர்களின் தொல்லையை திருமாலின் சக்ராயுதம் தடுத்தது. அதையும் தாண்டி ஒரு அம்பு தேவலனை துளைத்தது. அப்போதுதான் அம்பாள் சௌடாம்பிகை எனும் திருநாமத்தோடு எழுந்தருளி காத்தாள். இக்கோயிலில் அனைத்து தெய்வங்களின் சந்நதிகளும் ஒருங்கே அமைந்துள்ளன. மனதின் வேதனை போக்குவதில் இவள் மகாதேவி. ஆடி வெள்ளியின் ஒவ்வொரு வாரத்திற்கும் ஓவ்வொரு அலங்காரம் என அழகாக ஜொலிக்கிறாள். இக்கோயிலிலுள்ள அஷ்ட லட்சுமி சந்நதியை நிச்சயம் தரிசிக்க வேண்டும். கோவை நகரின் மையத்தில் ராஜவீதியில் கம்பீரமாக வீற்றிருக்கிறாள்.

புட்லூர் – பிள்ளைத்தாய்ச்சி அம்மன்

பார்க்கும்போதே உடலும், உள்ளமும் சிலிர்க்கும். கர்ப்பிணிப் பெண் வடிவில் உலகையே சுமந்து கருணையோடு கால்நீட்டும் பிள்ளைத் தாய்ச்சி அம்மனை வேறெந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. கருவைச் சுமக்கும் பெண்ணின் தாய்மையை, இங்கு உலகைச் சுமந்து வெளிப்படுத்துகிறாள். குழந்தைவரம் வேண்டி தொட்டில் கட்டுவோர்கள் விரைவில் மழலையோடு கண்கலங்க நிற்கிறார்கள். சென்னை, ஆவடி – திருவள்ளூர் வழியில் காக்களூர் நிறுத்தத்திற்கு முன்பாக உள்ளது ராமாபுரம் என்ற புட்லூர். அம்மையை தரிசி யுங்கள். ஆனந்தம் பெற்றிடுங்கள்.

சிதம்பரம் – தில்லை காளி

சிதம்பரத்தில் ஈசனோடு போட்டியிட்டு நடனம் புரிந்து தோற்றவள் தில்லையின் எல்லையில் கருணையோடு வீற்றிருக்கிறாள். அலகிலா விளையாட்டுடையவனின் பெருமையை உணர்ந்து தானும் அந்த ஆதிசக்தியில் பாதி என்பதை உணர்ந்து, நான்கு முகமான பிரம்ம சாமுண்டியாக கருவறையிலும், உக்கிரகமான காளியாக வெளியே தனி சந்நதியிலும் அமர்ந்திருக்கிறாள். உக்கிரம் குறையக் கூடாது என்பதற்காகவே அபிஷேகம் எதுவும் இவளுக்கு செய்யப்படுவதில்லை. தீவினைகளோ, தீய சக்திகளின் பாதிப்புகள் இருந்தால் தில்லை காளியின் தரிசனத்தில் தகர்ந்து போகும். இந்த ஆலயம் சிதம்பரத்திலேயே உள்ளது.

மயிலாப்பூர் முண்டகக் கண்ணி

மயிலையின் பேசும் தெய்வம். எப்போது வந்தமர்ந்தாள் என்று தெரியவில்லை. ஆனால், எப்போதுமே பக்தர்களை காக்க இங்குதான் நான் இருக்கப்போகிறேன் என்பதுபோல வீற்றிருக்கிறாள். மூலவருக்கான கருவறை விமானம் இல்லை. கட்ட அவள் உத்தரவு தரவில்லை என்கிறார்கள். அதனாலேயே கீற்றுக் கொட்டைக்குள் கருணை மணம் கமழ வாசம் செய்கிறாள். முண்டகம் என்றால் தாமரை என்று பொருள். தாமரை போன்ற கண்களை உடையவள் என்று பொருள். ஞான சூரியனை கண்ட தாமரை மலர்வதுபோல உங்களுக்குள்ளிருக்கும் ஞான தாமரையை இவள் மலர வைப்பாள். உயிரை காப்பாற்றுதலும், உயர்ந்த பதவியில் அமர்த்துதலையும் இவள் இங்கு எளிதாக செய்கிறாள். மயிலாப்பூர் நகரத்தின் மையத்திலேயே இவள் கோயில் கொண்டிருக்கிறாள்.

மங்கலம்பேட்டை மங்களநாயகி

செவ்வகக் கல் மூர்த்தத்தில் சற்று உக்கிரமாக அருளும் வனதுர்க்கை இவள். கண்ணகிக்கு கோயில் கட்ட சேரன் செங்குட்டுவன் இமயமலையிலிருந்து இரு கற்களை கொண்டு வந்தபோது தனக்கு மிகப் பெரிய உதவிகளை செய்த பரூர் பாளையத்தை சேர்ந்த குறுநில மன்னனுக்கு தான் கொண்டு வந்து இரு புனிதக் கற்களில் ஒன்றை அவனுக்கு ஈந்தான். அதில் ஒன்றில்தான் பரூர் மன்னன் உக்கிர நாயகியான இந்த மங்கலநாயகியை எழுந்தருளச் செய்தான். கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டையில் அமைந்துள்ள இக்கோயில் உளுந்தூர் பேட்டையிலிருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

கிருஷ்ணா

Tags : Malmalayanur ,Angalaparameshwari ,Eisen ,Brahman ,Saraswati ,Thiru ,Parvati ,Brahma ,
× RELATED நம்மை ஆளும் ஆண்டாள்