காயிதே மில்லத்தின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் அவரது நினைவிடத்தில் மலர்ப்போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்

 

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள், கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர்ப்போர்வை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்கள் 5.6.1896 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டையில் பிறந்தார். இவரது இயற்பெயர் முகமது இஸ்மாயில் ஆகும். கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் சமுதாயப் பணியே அவர் அரசியலுக்கு வருவதற்குக் காரணமாக அமைந்தது. பொது வாழ்க்கையில் கண்ணியத்தையும், நேர்மையையும், கடமையையும் கட்டிக்காத்ததோடு தேசப்பணியையும், மார்க்கப்பணியையும் தொடர்ந்து ஆற்றினார்.

அண்ணல் காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 1920-ஆம் ஆண்டு முதல் 16 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவராக இருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடினார். மேலும், இவர் 1945-ஆம் ஆண்டு சென்னை மாகாண முஸ்லிம் லீக் தலைவராகவும், 1948-ஆம் ஆண்டு முதல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராகவும் பணியாற்றினார்.

1946-ஆம் ஆண்டில் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும், அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகவும் சிறப்புடன் பணியாற்றியுள்ளார். மேலும், 1952-ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராகவும், 1962-ஆம் ஆண்டு முதல் 1972-ஆம் ஆண்டு வரை மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியுள்ளார்

காயிதே மில்லத் அவர்களின் எளிமையான வாழ்க்கைமுறை, நேர்மை மற்றும் சிறந்த குணத்திற்காக மக்கள் அவரை ‘கண்ணியமிக்க’ என்ற உயரிய அடைமொழியைச் சேர்த்து ‘கண்ணியமிக்க காயிதே மில்லத்’ என அழைத்தனர்.

 

Related Stories: