சென்னை: பள்ளிக்கரணையில் உள்ள குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் கழிவுகளால் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பற்றி எரிந்த தீயால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். மேலும், வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமானது. சென்னை மாநகராட்சி, பெருங்குடி 14வது மண்டலம், 188வது வார்டுக்கு உட்பட்ட பள்ளிக்கரணை -மடிப்பாக்கம் இடையே உள்ள மயிலை பாலாஜி நகரில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது.
இந்த குப்பை கிடங்கை ஒட்டி மெட்ரோ குடிநீர் வாரிய சேமிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்களில் நாய் கருத்தடை மையம், நாய்கள் பராமரிப்பு, கூடம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் இந்த குப்பை கிடங்கில் சேகரிக்கப்படும் குப்பையை தரம் பிரிக்கும் பணியும் நடந்து வருகிறது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரிக்கப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் குப்பை தரம் பிரிக்கும் இடத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக உள்ள பகுதியில் நேற்று காலை 8.30 மணிக்கு திடீரென தீப்பற்றியது. பிளாஸ்டிக் கழிவுகள் என்பதால் காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி கரும் புகை மண்டலமாக மாறியது. அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம், பெருங்குடி போன்ற பகுதி வரை வானுயரத்திற்கு கரும்புகை திரண்டது.
அந்த பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் பெரும் நெரிசலில் சிக்கினர். வாகன ஓட்டிகள் வயதானவர்கள் முதல் நாள் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் போன்றவர்களுக்கு என கண் எரிச்சல் ஏற்பட்டு மூக்கை மூடியபடி சென்றனர். தீ விபத்தில் பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் காவல் நிலைய பகுதியில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் வழக்குகளில் சம்பந்தப்பட்ட கார்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து எலும்புக்கூடானது.
தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் கிண்டி, வேளச்சேரி, மேடவாக்கம், துரைப்பாக்கம், திருவான்மியூர் போன்ற பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மெட்ரோ குடிநீர் வாரிய லாரிகள் 3 தண்ணீர் பவுசர்கள், 5 ரீசைக்கிளர்கள் ஆகியவற்றின் உதவியுடன் தீயணைப்பு படையினர் 3மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன், சுகாதார இணை ஆணையர் ஜெயசீவன், தெற்கு வட்டார துணை ஆணையர் அதாப் ரசூல், சட்டமன்ற உறுப்பினர் சரவணமூர்த்தி, துணைமேயர் மகேஷ் குமார், பெருங்குடி மண்டல குழு தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் மோகன வடிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
மாநகராட்சி ஆணையர் சமீரன் நிருபர்களிடம் கூறுகையில், தீ விபத்து நடந்த இடத்தில் 5லிருந்து 6 டன் பிளாஸ்டிக் கழிவுகள் தினமும் தரம் பிரிக்கப்படுகிறது. தீ விபத்திற்கான காரணத்தை முழுமையாக ஆராய வேண்டும். ஒரு மணி நேரத்திற்குள் தீயை கட்டுப்படுத்தினோம். அடுத்த இரண்டு நாட்களில் தீ விபத்து நடந்த சுற்று வட்டார பகுதிகளில் இலவச மருத்துவ முகாம் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் என்றார்.

