சென்னை: தனியார் மெட்ரிகுலேஷன், மேல்நிலைப் பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்கள் தொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை, தனியார் பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவையும், அதன்படி தனியார் பள்ளிகள் இயக்குநர் பிறப்பித்த அற்விப்பையும் ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்கள் மீது அதிகார வரம்பு இல்லாமல் மாநில தகவல் ஆணையம் விசாரித்த வழக்கில் தனியார் பள்ளிகளின் இயக்குநரை பொதுத் தகவல் அதிகாரியாக செயல்படுமாறு சேர்த்துள்ளது, ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி தனியார் பள்ளிகள் இயக்குநரும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்துமா என்பது ஆராயப்படவிலலை, அந்தச் சட்டத்தின் கீழ் தனியார் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் பொது அதிகார அமைப்புகளாக இல்லாத நிலையில், அவற்றுக்கு ஆணையத்திற்கு அதிகார வரம்பு இல்லை. வெளிப்படையான சட்டப்பூர்வ விதிமுறை இல்லாத நிலையில், தனியார் சுயநிதிப் பள்ளிகளின் கட்டணக் கட்டமைப்பைப் பொதுமக்களுக்கு வெளியிடுமாறு கட்டாயப்படுத்தும் உத்தரவைப் பிறப்பிப்பதற்கு தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை.
சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் மாநில பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டவையா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. விண்ணப்பத்தின் வரம்பை மீறி மாநில தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு அதிகார வரம்பு மீறல் என்பதால் அந்த உத்தரவையும், அதனடிப்படையில் தனியார் பள்ளிகள் இயக்குநர் பிறப்பித்த சுற்றறிக்கையையும் ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை அவற்றை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

