நீட் மறு தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை மோடி அரசு கல்வி முறையை சீரழித்து விட்டது: ராகுல் காந்தி

புதுடெல்லி: “பிரதமர் மோடி தனது 12 ஆண்டுகால ஆட்சியில் கல்வி முறையை சீரழித்து விட்டார்” என காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது. மே 3ம் தேதி நடந்த இளநிலை நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்ததாக புகார் எழுந்த நிலையில் வரும் 21ம் தேதி மறு தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் மத்தியபிரதேச மாநிலம் மாகஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த ஆகாங்ஷா சதுர்வேதி என்ற மாணவி, 21ம் தேதி மறு தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த நிலையில் மன அழுத்தம் காரணமாக நாக்பூரில் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், “ஆகாங்ஷா ஒரு மருத்துவராகி நாட்டுக்கும், சமூகத்துக்கும் சேவையாற்ற விரும்பினார். அவரது தந்தை ஒரு விவசாயி. தன் மகளின் மருத்துவ கனவை நனவாக்க தன்னுடைய கிசான் கடன் அட்டை மூலம் ரூ.3 லட்சம் கடன் வாங்கினார்.

ஆனால், நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு ரத்து, மறு தேர்வு போன்றவை ஆகாங்ஷாவை நிச்சயமற்ற சூழலுக்கு தள்ளி, நம்மை விட்டு நிரந்தரமாக பிரித்து விட்டது. ஆகாங்ஷாவின் மரணம் ஒரு தற்கொலை அல்ல. இது பிரதமர் மோடி ஆட்சியின் கீழுள்ள சீர்கெட்ட ஊழல் நிர்வாகத்தின் சோகமான விளைவு. கடந்த 12 ஆண்டுகளில் நீங்கள் கல்வி முறையை எந்தளவுக்கு நாசமாக்கியிருக்கிறீர்களோ, அதற்கான விலையை இந்தியாவின் ஒட்டுமொத்த இளைய தலைமுறையும் கொடுத்து கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Related Stories: