போரூர், ஜூன் 4: பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆன்லைன் டெலிவரி ஊழியரை போலீசார் கைது செய்தனர். சென்னை அமைந்தகரையில் 31 வயது மதிக்கத்தக்க பெண் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர், கடந்த 31ம் தேதி ஆன்லைனில் வீட்டிற்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்தார். பின்னர், ஆர்டர் செய்த பொருட்களுடன் தனியார் நிறுவன டெலிவரி ஊழியர், பெண்ணின் வீட்டிற்கு வந்தார்.
அப்போது, பெண்ணிடம் பார்சலை கொடுத்துவிட்டு குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் எடுக்க பெண் வீட்டுக்குள் சென்றபோது, பின்தொடர்ந்து சென்ற டெலிவரி ஊழியர் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெண் கூச்சல் போட்டுள்ளார். உடனே டெலிவரி ஊழியர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து பைக்கில் தப்பினார்.
இதுகுறித்து அமைந்தகரை காவல்நிலையத்தில் அந்த பெண் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், அவரது செல்போன் சிக்னலை வைத்தும் விசாரணை நடத்தி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அயனாவரம் பகுதியை சேர்ந்த லோகேஷ் (22) என்பவரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
