பூந்தமல்லி, ஜூன் 3: பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்க விழா நடந்தது. பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூன் 2, 3, 4, 5 மற்றும் 9, 10 ஆகிய தேதிகளில் 1435ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி சிறப்பு முகாம் 6 நாட்கள் நடைபெறுகிறது. பூந்தமல்லி தாலுகாவுக்கு உட்பட்ட பூந்தமல்லி, திருவேற்காடு, திருமழிசை, நேமம், வயலாநல்லூர், வானகரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை, ஆதரவற்ற விதவை சான்று, இலவச வீட்டு மனை பட்டா, சான்றிதழ்களில் பிழை திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும். இந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கான தொடக்க விழா பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் உதவி ஆணையர்(கலால்) கணேஷ் தலைமை தாங்கினார். பூந்தமல்லி நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், வட்டாட்சியர் உதயம், தனி வட்டாட்சியர்கள் சங்கிலி ரதி, சரஸ்வதி, ஜெயஸ்ரீ, துணை வட்டாட்சியர்கள் காதர் பர்வீன், ராமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் பூந்தமல்லி எம்எல்ஏ குட்டி(எ) பிரகாசம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஜமாபந்தியை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். அந்த மனுக்களை அதிகாரிகளிடம் அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர்.
முதல் நாளான நேற்று பூந்தமல்லி உள் வட்டத்திற்கு உட்பட்ட பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், கோபுரசநல்லூர் மற்றும் திருவேற்காடு உள் வட்டத்திற்கு உட்பட்ட திருவேற்காடு, சென்னீர்குப்பம், வீரராகவபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களின் மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து 3 மற்றும் 4ம் தேதி தேதி திருமழிசை உள் வட்டத்திற்கு உட்பட்ட திருமழிசை, வரதராஜபுரம், வெள்ளவேடு, வரதராஜபுரம், குத்தம்பாக்கம், செம்பரம்பாக்கம், நசரத்பேட்டை, 5ம் தேதி நேமம் உள் வட்டத்திற்கு உட்பட்ட குத்தம்பாக்கம், நேமம், கொரட்டூர், 9ம் தேதி வயலாநல்லூர் உள் வட்டத்திற்கு உட்பட்ட வயலாநல்லூர், கண்ணப்பாளையம், சோராஞ்சேரி, பாரிவாக்கம், 10ம் தேதி வானகரம் உள் வட்டத்திற்கு உட்பட்ட அயனம்பாக்கம், கோலடி, வானகரம், நூம்பல், அடையாளம் பட்டு உள்ளிட்ட பகுதி மக்கள் கோரிக்கை மனுக்கள் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர் பன்னீர்செல்வம், வட்ட துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் கஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் பிரகாஷ் பாலாஜி, கோபி, தனலட்சுமி, கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
