காஞ்சிபுரம், ஜூன் 4: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், வைகாசி விசாக பிரமோற்சவ திருத்தேர் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், கலெக்டர் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரினை வடம் பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரத்தில் உலக பிரசத்தி பெற்ற அத்திவரதர் கோயில், தங்க பல்லி, வெள்ளி பல்லி கோயில், தேவராஜ சுவாமி கோயில் என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், பிரம்ம தேவனே முன்னின்று நடத்தி வைப்பதாக கருதப்படும் வைகாசி விசாக பிரமோற்சவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த பராபவ ஆண்டுக்கான வைகாசி பிரமோற்சவம் மேஷ லக்னத்தில் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 6ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நாள்தோறும் வரதராஜ பெருமாள் காலை, மாலை என இரு வேளைகளிலும் தங்க சப்பரம், சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், சூரிய பிரபை வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், சந்திர பிரபை வாகனம், தங்க பல்லக்கு, யாளி வாகனம், யானை வாகனம், திருத்தேர், குதிரை வாகனம், புண்ணியகோட்டி விமானம் ஆகிய வாகனங்களில் சிறப்பு அலங்காரங்களில், காஞ்சிபுரம் நகரின் ராஜா வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
பிரமோற்சவத்தின் முக்கிய விழாவான திருத்தேர் விழா நேற்று அதிகாலை நடந்தது. கோயில் மண்டபத்தில் பெருமாளை மல்லி, ரோஜா உள்பட பல்வேறு மலர்களால் அலங்கரித்து, நீலம், தங்க பச்சைநிற பட்டு உடுத்தி
வைரம், வைடூரியங்களுடன் வரதராஜ பெருமாள் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். மேலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், கோயிலில் இருந்து தேவி – பூதேவியுடன் நாச்சியாருடன் உற்சவர் வரதராஜ பெருமாள் தேரடி பகுதிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு ஆராதனை மற்றும் தீபாராதனை நடந்தது.
இதில் இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.தென்னரசு, வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார், கலெக்டர் சினேகா மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்து, தரிசனம் செய்தனர். அப்போது `கோவிந்தா, கோவிந்தா’, `ஓம் நமோ நாராயணா’ என்ற கோஷத்துடன் தேரை பக்தர்கள் இழுத்து சென்றனர். வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பெருமாளை தரிசனம் செய்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு வழிநெடுகிலும் ஆன்மிக நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலம் பக்தர்களுக்கு பொங்கல், புளி சாதம், லெமன் சாதம், நீர் மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. பக்தர்கள் வசதிக்காக ஒலிமுகமதுபேட்டை பழைய ரயில் நிலையம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டன. மேலும், குடிநீர், கழிப்பறை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. பிரசித்தி பெற்ற தேர் திருவிழாவை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட போலீசார் எஸ்பி அரவிந்த் தலைமையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம், இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் குமாரதுரை, உதவி ஆணையர் ராஜலட்சுமி, பட்டாச்சாரியார்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
