சென்னை: முதல்வர் விஜய்யின் திருச்சி பேச்சு ஏமாற்றமளிக்கிறது; மேட்டூர் அணை திறப்பு மற்றும் குறுவை சாகுபடி குறித்து வாய்திறக்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு பங்கேற்ற முதலாம் அரசியல் நிகழ்ச்சியான திருச்சி பொதுக்கூட்டத்தில் தமிழ்நாட்டு மக்களின், குறிப்பாக உணவு வழங்கும் உழவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாதது ஏமாற்றமளிக்கிறது.
காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் இன்றைய பெரும் கவலை குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து வழக்கம் போல ஜூன் 12ம் நாள் தண்ணீர் திறக்கப்படுமா? என்பது தான். ஜூன் 12ம் நாளுக்கு இன்னும் 10 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இது குறித்த நிலைப்பாட்டை அரசு அறிவித்திருக்க வேண்டும். ஆனால், மறந்தும் கூட மேட்டூர் அணை திறப்பு, குறுவை சாகுபடி குறித்து முதல்வர் வாய் திறக்கவில்லை.
மேகதாது அணை கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்பதால் காவிரி பாசன மாவட்டங்களின் விவசாயிகள் அச்சமடைந்துள்ள நிலையில், அதை தணிக்கும் வகையிலான நம்பிக்கையூட்டும் அறிவிப்புகளை முதல்வர் விஜய் திருச்சியில் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், விஜய் அதை செய்யவில்லை.
விஜய் மீது நம்பிக்கை வைத்து தான் அவரிடம் ஆட்சிப் பொறுப்பை தமிழக மக்கள் வழங்கி உள்ளனர். அவர்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் முதலமைச்சரின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இனியாவது உழவர்கள் மற்றும் தமிழக மக்களின் தேவைகளை உணர்ந்து, அவற்றை நிறைவேற்றும் வகையிலான அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
