ஐக்கிய நாடுகள்: தெற்கு சூடானில் உள்ள ஐநா அமைதிப்படையில் பணியாற்றும் 53 பெண்கள் உட்பட 550க்கும் மேற்பட்ட இந்திய அமைதிப்படை வீரர்களின் அர்ப்பணிப்பு சேவைகளுக்காக ஐநா கவுரவ பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளது. உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட தெற்கு சூடானில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியின் கீழ் இந்திய அமைதிப்படை தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய அமைதிப்படை வீரர்களின் சேவையை பாராட்டும் வகையில் ஐநா கவுரவப் பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளது.
தெற்கு சூடானின் மலகால் நகரில் நடைபெற்ற விழாவில், 565 இந்திய ப்ளூ ஹெல்மெட் வீரர்களும், 465 ருவாண்டா அமைதிப்படை வீரர்களும் ஐநா கவுரவ பதக்கத்தை பெற்றதாக ஐநா அமைதிப்படை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ப்ளூ ஹெல்மெட் என்பது ஐநா அமைதிப்படைகளின் செயல்பாட்டு கட்டளையின் கீழ் பணியாற்றும் ராணுவ வீரர்கள், காவல்துறை அதிகாரிகள், பொதுத்துறை நிபுணர்களைக் குறிக்கிறது. பணியின் போது சுமார் 180 இந்திய அமைதிப்படை வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.
