வாங்க… ஒருநாள் வந்து வயலில் இறங்கி விவசாயம் பாருங்க.. அப்புறம் பேசுங்க.. அமைச்சருக்கு டெல்டா விவசாயிகள் சவால்

தஞ்சை: விவசாயிகளின் வலியை புரிந்து கொள்ளாமல் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுவதாக காவிரி டெல்டா விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். “விவசாயத்தை விட விளையாட்டு துறை மிகவும் கடினமானது” என்று ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துமிகவும் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விவசாயிகள், உணவுப் பொருட்கள் இன்றி விளையாட்டோ, வேறு எந்த துறையோ சாத்தியமில்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ளனர். விவசாயிகளின் உழைப்பைக் கொச்சைப்படுத்தும் விதமாக அமைச்சர் பேசியுள்ளார் என வேதனை தெரிவித்துள்ளனர். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஒரு நாள் முழுமையாக வயலில் இறங்கி விவசாயம் செய்து பார்த்து விட்டு பிறகு உண்மையில் எது கடினம் என்பது குறித்து பேச வேண்டும், அப்போது தான் எங்களின் உண்மையான கஷ்டம் என்னவென்று புரியும் என டெல்டா விவசாயிகள் சவால் விடுத்துள்ளனர்.

ஏற்கனவே கடுமையான விலைவாசி உயர்வு, கூலி ஆட்கள் பற்றாக்குறை மற்றும் நீர் மேலாண்மைப் பிரச்சினைகளால் அல்லல்படும் தங்களுக்கு, அமைச்சரின் சிறுபிள்ளைத்தனமான பேச்சு மனவேதனை அளிப்பதாக டெல்டா விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் தவெக அரசு அறிவித்துள்ள பயிர் கடன் தள்ளுபடி முற்றிலும் ஏமாற்றம் அளிக்கிறது எனவும் விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

Related Stories: