×

மேல்மருவத்தூரில் ஒரு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது; பாழடைந்து வரும் தமிழ்நாடு ஓட்டல்: புதிய வணிக வளாகத்துடன் சீரமைக்க கோரிக்கை

 

மதுராந்தகம்: மேல்மருவத்தூரில் ஒரு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட தமிழ்நாடு ஓட்டல் பாழடைந்து வரும் நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் புதிதாக வணிக வளாகத்துடன் ஓட்டல் கட்டிடம் கட்டி தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஒரு ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஓட்டல் உள்ளது. ஒரு வரவேற்பு அறை, நான்கு தங்கும் அறை, ஒரு உணவகம் உள்ளிட்ட இரண்டு கட்டிடங்களுடன் கடந்த 1992ம் ஆண்டு இந்த கட்டிடம் திறக்கப்பட்டது. அன்றிலிருந்து தமிழ்நாடு ஓட்டல் என்ற பெயரில் நன்றாக செயல்பட்டு வந்தது.

இதில், காலப்போக்கில் இந்த ஓட்டலை லீசுக்கு எடுத்தவர்கள் முறையாக நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த ஓட்டல் மூடப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த ஓட்டல் மூடியே கிடக்கிறது. மேலும் இந்த ஓட்டலுக்கான மின் கட்டணம் கட்டாமல் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியும் செலுத்தப்படாமல் உள்ளது. தற்போது இந்த ஓட்டல் கட்டிடம் பகுதி பொதுமக்களின் சிறுநீர் பகுதியாக மாறியுள்ளது.

இதனால் அந்த ஓட்டல் அருகில் சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது. விஷ பூச்சிகளின் நடமாட்டமும் அங்கு அதிகளவில் காணப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக செயல்பட்ட இந்த ஓட்டல் தற்போது பூட்டியே கிடக்கிறது. எனவே இந்த தமிழ்நாடு ஓட்டல் கட்டிடத்திதை இடித்து அகற்றிவிட்டு, வணிக வளாகத்துடன் புதிதாக ஓட்டல் கட்டிடம் கட்ட வேண்டும். மேலும், சுற்றுலா துறையே எடுத்து நடத்த வேண்டும் என சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு கோரிக்கை எழுந்துள்ளது.

தற்போதைய மதிப்பு ரூ.10 கோடி
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இந்த ஓட்டல் உள்ளதால் இந்த ஓட்டலின் தற்போதைய சொத்து மதிப்பு மட்டும் ரூ.10 கோடி ஆகும். இங்கு புதிய கட்டிடங்கள் கட்டி சுற்றுலா வளர்ச்சி கழகம் நடவடிக்கை எடுத்தால் பல லட்சம் ரூபாய் ஆண்டுக்கு சுற்றுலாத்துறை வருவாய் ஈட்ட முடியும்.

அருகில் சித்தர் பீடம்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் அருகில் இந்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஓட்டல் கட்டிடம் உள்ளது. இந்த சித்தர் பீடம் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் ஏராளமான செவ்வாடை பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகின்றனர். இதனால் இங்கு புதிய கட்டிடம் கட்டினால் ஏராளமான பக்தர்கள் பயன் பெறுவர்.

Tags : Melmaruvathur ,Tamil Nadu Hotel ,Madhurantakam ,Tamil Nadu Tourism Development Corporation ,Chengalpattu district ,Melmaruvathur… ,
× RELATED குதிரை பேரத்தை தமிழக மக்கள்...