×

ஒர்க்காட்பேட்டை-ஆத்தூர் பாலாற்று மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்தும் மண்குவியல்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

செங்கல்பட்டு: பழத்தோட்டம் – ஒர்க்காட்பேட்டை மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள மண்குவியல்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஒர்க்காட்பேட்டை-ஆத்தூர் பழத்தோட்டம் இடையே கடந்த 30 வருடங்களுக்கு முன்பு பாலாற்றின் குறுக்கே கிராவல் சாலை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சாலை வழியாக ஒர்க்காட்பேட்டை, காவி தண்டலம், காவூர், விச்சூர், திருவானைக்கோயில், பினாயூர், மாம்பாக்கம், சித்தனகாவூர், பழவேரி, பேரணக்காவூர், சாத்தனஞ்சேரி, சீதனஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் செங்கல்பட்டு பகுதிக்கு பல்வேறு வேலைகளுக்காக வந்து சென்று கொண்டிருந்தனர்.

அவ்வப்போது பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்த சாலை முழுவதுமாக துண்டிக்கப்படும். இதனால் ஒர்க்காட்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் செங்கல்பட்டுக்கு 25 கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு வருவது வழக்கம். இந்தநிலையில் பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் பேரில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.25 கோடியில் ஒர்க்காட்பேட்டை-ஆத்தூர் இடையே பாலாற்று மேம்பாலம் கட்டப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமமின்றி செங்கல்பட்டு பகுதிக்கும், செங்கல்பட்டில் இருந்து ரயில் மூலம் சென்னை போன்ற பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒர்க்காட்பேட்டை, மையூர், பிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏரி மண் டெண்டர் விடப்பட்டதால் அளவுக்கு அதிகமான ஏரி மணல் ஏற்றிக்கொண்டு கனரக லாரிகள் இந்த பாலத்தை பயன்படுத்திச் செல்கின்றன.

இதனால் உபரியான ஏரி மண் பாலத்தில் கொட்டி பாலத்தின் இருபுறங்களிலும் மண் குவியலாக மாறி உள்ளது. பாலத்தில் உள்ள மழைநீர் வெளியேறும் குழாய்களை ஏரி மண் அடைத்து விடுவதால் அவ்வப்போது பெய்யும் மழையால் தேங்கும் மழை நீர் கீழே செல்ல முடியாமல் பாலத்திலேயே தேங்கி நிற்கிறது. மண் குயிலோடு சேர்ந்து மழை நீரும் வடியாமல் பாலத்தின் மீது தேங்குவதால் இரவு நேரங்களில் பாலத்தை கடக்கும் பொதுமக்கள் சேறும், சகதியிலும் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து விபத்து அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது.

எனவே மேம்பாலத்தின் மேல் குவிந்துள்ள மண்குவியல்களை அகற்றி மழைநீர் வடிவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும், வெயில் நேரங்களில் பாலத்தின் மீதுள்ள மண் குவியல்கள் வாகனங்கள் செல்லும்போது காற்றில் தூசியாக மாறி வாகன ஓட்டிகளின் கண்களில் படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அளவுக்கு அதிகமாக லாரிகளில் மண் எடுத்துச் செல்வத்தை தடுக்க வேண்டும், மேம்பாலத்தில் குவிந்துள்ள மண் குவியல்களை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Orakatpatti-Atur Balatu ,Chengalpattu ,Orchard ,Orkhatpat ,Gravel Road ,Balat ,Atur Orchard ,
× RELATED மதுராந்தகம் – திண்டிவனம்...