தி.மு.க.வை விமர்சித்து வரும் மாணிக்கம் தாகூர் விருதுநகரில் யாருடைய தயவால் வென்றார்: ஆர்.எஸ்.பாரதி சரமாரி கேள்வி

 

சென்னை: தி.மு.க.வை விமர்சித்து வரும் மாணிக்கம் தாகூர் நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் யாருடைய தயவால் வெற்றி பெற்றார் என்று ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: சட்டமன்றத்தில் ‘இன்ஸ்டாகிராம்’, சமூகவலைத்தளம் மூலம் ஆட்சிக்கு வந்தது போன்று, அதே பாணியில் த.வெ.க. பொய் பிரசாரத்தை செய்து வருகிறார்கள். கோவையில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை திசை திருப்புகின்ற வகையில் ஒரு பெண் சமூக வலைத்தளத்தில் பேட்டியளித்து அது வைரலாக ஓடி கொண்டிருக்கிறது. அதில் அவர், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க.வை பற்றி அவதூறாக இன்னொருவர் ஐ.டி. மூலம் வெளியிட்டு இருக்கிறார்கள்.

எனவே பேட்டியளித்த பெண் மீது தி.மு.க. சார்பில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சாதாரணமாக அவதூறு வழக்கு செய்தால் அதிகபட்சம் 2 ஆண்டுகள் தான் சிறை தண்டனை கிடைக்கும். ஆனால் இதுபோன்று தவறான ஐ.டி.யை பயன்படுத்தி அவதூறான தகவலை பரப்பினால் அதற்கு ஆயுள் தண்டனை. எனவே இதுபோன்று அவதூறு பரப்ப கூடாது என்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எச்சரிக்க வேண்டும். குறிப்பாக அந்த தலைவரும் சொல்ல வேண்டும்.

தி.மு.க.வை விமர்சித்து வரும் மாணிக்கம் தாகூர் நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் யாருடைய தயவால் வெற்றி பெற்றார்? என்பதை உணர வேண்டும். அ.தி.மு.க.வில் 3 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்கள். அவர்களுக்கு இருக்கும் சொரணையில் கொஞ்சம் இருந்தால் மாணிக்கம் தாகூர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: