×

நாடு முழுவதும் மீண்டும் ரூ.3 வரை அதிகரிப்பு: பெட்ரோல், டீசல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு

 

* அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தால் மக்கள் பாதிப்பு
* ஆட்டோ, கார், சரக்கு வாகனங்களின் வாடகை உயருகிறது

சேலம்: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடந்த 10 நாளில் ரூ.7 உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் மட்டும் ரூ.2.40 முதல் ரூ.3 வரை அதிகரித்துள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். மேலும், ஆட்டோ, கார், லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்களின் வாடகையும் உயர்த்தப்பட்டு வருகிறது.

மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போரின் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிப்ரவரி மாதம் ஒரு பீப்பாய் 65 டாலர் என விற்ற நிலையில், தற்போது 110 டாலருக்கு மேல் உயர்ந்து விட்டது. 5 மாநில தேர்தல் முடிந்த நிலையில் தொடர்ந்து பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மூலம் ஒன்றிய பாஜ அரசு உயர்த்தி வருகிறது.

இந்தவகையில், நாடு முழுவதும் கடந்த மார்ச் 7ம் தேதி 14.2 கிலோ வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.60ம், மே 1ம் தேதி 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை ரூ.998ம் அதிகரிக்கப்பட்டது. இதன்பின், கடந்த 15ம் தேதி பெட்ரோல், டீசல் விலையை சராசரியாக ரூ.3ம், 19ம் தேதி ரூ.1ம், 23ம் தேதி ரூ.1ம் என அதிரடியாக உயர்த்தினர்.

இந்நிலையில் நேற்று (25ம் தேதி) காலை 4வது முறையாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. நாடு முழுவதும் ரூ.2.40 முதல் ரூ.3 வரை உயர்த்தியுள்ளனர். இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.31ல் இருந்து ரூ.2.46 உயர்ந்து ரூ.107.77 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.96.98ல் இருந்து ரூ.2.57 உயர்ந்து ரூ.99.55 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவே சேலத்தில் பெட்ரோல் ரூ.106.13ல் இருந்து ரூ.108.60 ஆகவும், டீசல் ரூ.97.85ல் இருந்து ரூ.100.43 ஆகவும் அதிகரித்துள்ளது.

டெல்லியில் பெட்ரோல் விலை நேற்று ரூ.2.61 உயர்ந்து ரூ.102.12 ஆகவும், டீசல் ரூ.2.71 உயர்ந்து ரூ.95.20 ஆகவும், மும்பையில் பெட்ரோல் ரூ.2.73 உயர்ந்து ரூ.111.18 ஆகவும், டீசல் ரூ.2.81 உயர்ந்து ரூ.97.83 ஆகவும், கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.2.86 உயர்ந்து ரூ.113.47 ஆகவும், டீசல் ரூ.2.80 உயர்ந்து ரூ.99.82 ஆகவும் அதிகரித்துள்ளது. சில நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.116க்கும், டீசல் ரூ.104க்கும் அதிகமாக விற்பனையாகிறது.

10 நாளில் 4வது முறையாக விலை உயர்ந்ததன் மூலம், இதுவரை சராசரியாக ரூ.7 விலையேற்றம் கண்டுள்ளது. அதாவது சென்னையில் பெட்ரோல் ரூ.7.29ம், டீசல் ரூ.7.45ம் உயர்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு எரிபொருளுக்கான செலவினம் அதிகரித்துள்ளது. அத்துடன் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை உள்ளிட்டவைகளின் விலையும் உயர்ந்துள்ளது.

இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். 10 நாளில் பெட்ரோல், டீசல் ரூ.7 வரை உயர்ந்ததால், ஆட்டோ, கார், பைக் டாக்சி வாடகையை உயர்த்தி வருகின்றனர். அத்துடன் நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்தை மேற்கொள்ளும் கனரக வாகன உரிமையாளர்கள், வாடகையை அதிகரித்து வருகின்றனர். இந்த வாடகை உயர்வு என்பது, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தில் வந்து நிற்கிறது. இதனால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

வரும் நாட்களிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்கும் என்றும், கடந்த 2 மாதங்களாக சந்தித்த நஷ்டத்தை ஈடுசெய்ய விலையேற்றம் மேற்கொள்ளப்படுகிறது என்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இவ்விலையேற்றம் நிகழாமல் தடுக்க ஒன்றிய பாஜ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோது லாபமாக ஈட்டிய பணத்தை தற்போது இழப்பை ஈடுகட்ட பயன்படுத்த வேண்டுமென்றும் எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

* அமெரிக்க ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கு பாதிப்பு

அமெரிக்காவுடன் ஒன்றிய அரசு புதிய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்காக ரஷ்யாவிடம் இருந்து 45 சதவீத அளவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள இந்தியாவை அமெரிக்கா நிர்பந்தித்தது. அத்துடன் வெனிசுலாவில் இருந்து தான், இனி கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள வேண்டும் என புதிய ஒப்பந்தம் மேற்கொண்டனர். இதனால், தற்போது மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழலில், இந்தியாவால் மீண்டும் பழையபடி சுதந்திரமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் உள்ளது. இப்பாதிப்பில் இருந்து மீண்டு வர முடியாமல் ஒன்றிய அரசு தவிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

Tags : Salem ,
× RELATED தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 அதிகரிப்பு