×

இந்திய-அமெரிக்க உறவில் வேகம் குறையவில்லை: மார்கோ ரூபியோ பேட்டி

 

புதுடெல்லி: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில் வேகம் குறையவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறினார். இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ டெல்லியில் நேற்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: இந்தியா-அமெரிக்க உறவுகள் வேகம் குறையவில்லை. வரும் ஆண்டுகளில் இந்த உறவுகள் இன்னும் வலுப்பெறும்.இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என நம்புகிறேன். கிட்டத்தட்ட அனைத்து முக்கிய உலகளாவிய பிரச்னைகளிலும் இரு தரப்பினரும் வியூக ரீதியாக ஒத்த கருத்துடையவர்களாக இருக்கின்றனர் என்றார்.

மேற்கு ஆசிய மோதல் குறித்த கலந்தாய்வுகள் அடங்கிய கூட்டத்திற்குப் பிறகு பேசிய ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர், மேற்கு ஆசியா, இந்திய துணைக்கண்டம் மற்றும் கிழக்கு ஆசியாவின் நிலைமை குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்தியா தடையற்ற கடல்சார் வர்த்தகத்தை ஆதரிக்கிறது.

அமெரிக்க அமைச்சர் மார்கோரூபியோவுடன் சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு குறித்து விவாதித்தேன்: எரிசக்தித் துறையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சமீபத்திய ஒத்துழைப்பை நானும் செயலாளர் ரூபியோவும் வரவேற்றோம் என்றார். டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்த விசா மற்றும் குடிவரவு கொள்கை மாற்றங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோவிடம், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கவலை வெளியிட்டார்.

இந்த புதிய திட்டத்தால் சட்டபூர்வமான நடமாட்டத்திற்கு பாதிப்பு வரக்கூடாது என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த ரூபியோ,அமெரிக்கா குடிவரவு அமைப்பை மேம்படுத்த முயற்சிப்பதால், இந்த காலகட்டத்தில் சில தடைகளும் சிக்கல்களும் ஏற்படலாம் என்பதை ஒப்பு கொள்கிறேன். ஆனால் இது அனைத்துத் தரப்பினருக்கும் உதவியாக அமையும் என்றார்.

Tags : Marco Rubio ,New Delhi ,US ,Secretary of State ,India ,United States ,Union External Affairs ,Minister ,S.… ,
× RELATED 66 பேருக்கு பத்ம விருதுகளை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு