×

மேற்குவங்க தேர்தல் களத்தில் பரபரப்பு; ‘பல்தா’ மறுதேர்தலில் 88% வாக்குப்பதிவு: நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை

 

கொல்கத்தா: பல்தா தொகுதி மறுதேர்தலில் 87.9 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி நடந்த பொதுத்தேர்தலின் போது, பல்தா தொகுதி வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது வாசனை திரவியங்கள் மற்றும் ‘டேட்’ ஒட்டப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அங்கு மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதற்கிடையே, கடந்த 4ம் தேதி மாநிலத்தின் இதர 293 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் வெளியாகி, வரலாற்றில் முதல்முறையாக பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில், பல்தா தொகுதி மறுதேர்தல் நடத்தப்படவிருந்த சூழலில், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் திடீரென போட்டியிலிருந்து விலகுவதாக கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தேபான்ஷு பாண்டா, காங்கிரஸ் வேட்பாளர் அப்துர் ரசாக், சிபிஎம் வேட்பாளர் ஷம்பு குர்மி உட்பட 6 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். பல்தா தொகுதியில் மொத்தம் 2,36,000 வாக்காளர்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடந்த மறுதேர்தலில், 87.9 சதவீத வாக்குகள் பதிவாகின. அசம்பாவிதங்களைத் தவிர்க்க 285 வாக்குச்சாவடிகளுக்கு 35 நிறுவனங்களைச் சேர்ந்த ஒன்றிய பாதுகாப்பு படைகளும், 30 விரைவு அதிரடிப் படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால், அக்கட்சியின் சட்டப்பேரவை பலம் 208 ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியின், டைமண்ட் ஹார்பர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியாக பல்தா இருப்பதால், இந்த தேர்தல் களம் பெரும் அரசியல் வியூகம் கொண்டதாக மாறியுள்ளது.

 

Tags : West Bengal ,Balta ,re ,Kolkata ,
× RELATED நாடு முழுவதும் வெப்ப அலை: 11 மாநிலங்களில் பள்ளிகள் மூடல்