மதுரை: அதிகாரிகளுக்கு டார்ச்சர் மற்றும் வலைத்தளங்களில் அவதூறாக பதிவு செய்யும் தவெக பெண் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. திராவிடர் பெரியார் கழக தலைவர் மணி அமுதன், மதுரையில் தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரியிடம் நேற்று அளித்த புகார் மனுவில், ‘‘தவெகவைச் சேர்ந்த வாசுதேவி என்பவர், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்துவதாக கூறி அரசு அதிகாரிகளையும், பொதுமக்களையும் தொந்தரவு செய்துள்ளார். அவர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோன்று மதுரையை சேர்ந்த தவெக பெண் நிர்வாகி ஒருவர் இணையதளத்தில் பெண்கள் குறித்து அவதூறாக பேசி வருகிறார். இணையதளங்களில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்களை அவதூறாக பேசி வரும் தவெகவினர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
பின்னர் மணி அமுதன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தூய சக்தி என்று தங்களை சொல்லிக் கொள்ளும் தவெகவினர், பெண்களை அவதூறாக பேசியதாக பொன்ராஜ் மீது குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், அந்த கட்சியை சேர்ந்தவர்கள், மாற்றுக்கட்சியினரை ஆபாசமாக வலைத்தளங்களில் பேசி வருவதை முதலமைச்சர் கண்டிக்க வேண்டும். அவதூறாக பேசி வரும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
