ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்துக் கடைகள் வேலைநிறுத்தம்..!

சென்னை: நாடு முழுவதும் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடைக்கோரி மருந்துக் கடைகள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. ஆன்லைன் மருந்து விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி அடிமையாகும் இளம் தலைமுறையை காக்க வேண்டும். உயிர்காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்கள், அதிக தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்த வேண்டும். போலி மருந்து விற்பனையை தடுக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் வாங்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் கலாசார சீரழிவை தடுத்து நிறுத்த வேண்டும், மின்மருந்தகச் செயல்பாடுகள் தொடர்பான அரசாணைகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று (மே.20) வேலைநிறுத்தத்திற்கு, அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும் வேலைநிறுத்தத்தில் நாடு முழுவதும் சுமார் 12.4 லட்சம் மருந்தக உரிமையாளர்கள் பங்கேற்பதால் மருந்து கடைகளும் அடைக்கப்படுகின்றன. அதேபோல், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் மருந்தகங்கள் உள்பட தமிழ்நாட்டில் உரிமம் பெற்ற சுமார் 42 ஆயிரத்துக்கும் அதிகமான மருந்து கடைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.

இதனால் மருந்து வினியோகம் பாதிக்கப்படும். மருந்தகங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த தொழிலை நம்பியுள்ள சுமார் 5 கோடி மக்களின் வாழ்வாதாரமும் இதனால் பாதிக்கப்படும். உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், போராட்டம் தீவிரப் படுத்தப்படும் என்று சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

நோயாளிகளுக்கான அவசர மருந்து சேவையை உறுதிப்படுத்த தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு இயக்கத்தின் சார்பில் உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மருந்து கட்டுப்பாடு இயக்கத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆய்வாளர்களை தொடர்பு கொண்டு தேவையான அவசர மருந்துகளை பெறலாம். ஆஸ்பத்திரிகள், கிளினிக்குகளில் செயல்படும் மருந்தகங்கள் வழக்கம் போல இயங்கும். வேலைநிறுத்தம் நடந்தாலும் அவசர கால மருந்துகள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.

Related Stories: