திருத்தணி, மே 19: திருத்தணி அருகே காசிநாதபுரம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள நியாயவிலைக் கடையில் பொருட்களை பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனே வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே செல்வதால் ரேஷன் பொருட்கள் வீணாகி வருகிறது. திருத்தணி அருகே பட்டாபிராமபுரம் ஊராட்சி காசிநாதபுரம் கிராமத்தில் ஊராட்சி கட்டிடத்தில் 20 ஆண்டுகளாக முழுநேர நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது. காசிநாதபுரம், காசிநாதபுரம் காலனி, ஆசிரியர் நகர் பகுதிகளை சேர்ந்த 500 குடும்ப அட்டைதாரர்கள் அக்கடையில் ரேஷன் பொருட்கள் பெற்று பயன் அடைந்து வருகின்றனர்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் தற்போது பலவீனமடைந்து மேல்தளம் சிமென்ட் பூச்சு பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும்படி துருப்பிடித்து காணப்படுகிறது. மேலும் சுவர்கள் பலவீமடைந்துள்ளது. மழை காலங்களில் மழைநீர் கட்டிடத்திற்குள் சென்று ரேஷன் பொருட்கள் வீணாகும் நிலை உள்ளது. இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள நியாய விலைக் கட்டிடத்தில் ரேஷன் பொருட்கள் வாங்கிச் செல்ல மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ரேஷன் பொருட்கள் வீணாவதைத் தடுக்க புதிய கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
