பெரியபாளையம் அருகே பட்டப்பகலில் துணிகரம்; விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி, பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

 

பெரியபாளையம், மே 22: பெரியபாளையம் அருகே, பட்டப்பகலில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி, 50,000 ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரியபாளையம் அடுத்த, ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார்-புவனேஸ்வரி தம்பதியர். மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தற்போது, கோடை விடுமுறை என்பதால் காலையில் தினந்தோறும் தோட்டத்தில் பூக்களை பறிக்கச் செல்லும் போது தங்களது குழந்தைகளையும் அழைத்துச் சென்று பூக்களை பறித்து, அவற்றை கோயம்பேடு சந்தைக்கு அனுப்பி வைப்பது வாடிக்கை.

வழக்கம்போல், சுரேஷ்குமார் காலையில் தனது வீட்டை பூட்டிக்கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் பூப்பறிக்க தோட்டத்திற்கு சென்றுள்ளனர். தமது தோட்டத்தில் பூக்களை பறித்து சந்தைக்கு அனுப்பிவிட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து, உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், 50,000 ரூபாய் ரொக்க பணம் கொள்ளை போனது தெரியவந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் காவல்துறையினர் மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பூப்பறிக்கச் சென்ற சிறிது நேரத்தில் பட்டப் பகலில் வீட்டிலிருந்த 15 சவரன் தங்க நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இரவு நேரத்திலும், பகலிலும் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

Related Stories: