விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏற்காடு: விடுமுறை தினமான இன்று ஏற்காடு, ஒகேனக்கல்லில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதியது. சேலம் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமான ஏற்காட்டிற்கு ஆண்டு முழுவதும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கோடை காலத்தில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். இதன்படி அந்த ஆண்டும் தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் மிதமான சாரல் மழையால் ஜில் கிளைமேட் நிலவுகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று காலை முதலே ஏற்காட்டிற்கு, பைக் மற்றும் கார்களில் குடும்பம் குடும்பமாக வந்து குவிந்தனர். அங்குள்ள அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், காட்சி முனையம், சேர்வராயன் கோயில் உள்ளிட்ட இடங்களில் குவிந்தனர். படகு இல்லத்தில் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏற்காட்டில் கோடைவிழாவுக்காக முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. அதற்காக பூங்காக்களில் வைக்கப்பட்டுள்ள வண்ண செடிகளுக்கு இடையே நின்று ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சுற்றுலாப்பயணிகள் வருகையால் நகரின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், ஓட்டல், பேக்கரி, சாலையோர கடைகளில விற்பனை களை கட்டியது.

இதேபோல் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் விடுமுறை தினமான இன்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் குவிந்தனர். ஆயில் மசாஜ் செய்தும், அருவி, ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். மேலும் பரிசல் சவாரி செய்து காவிரியின் அழகை ரசித்தனர். அங்குள்ள பூங்கா, முதலை பண்ணை ஆகியவற்றை பார்வையிட்டு, மீன் கடைகளில் சுவையான மீன்களை வாங்கி ருசித்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூருக்கும் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வந்தனர். அவர்கள் காவிரியில் நீராடி, அணைக்கட்டு முனியப்பனை வழிபட்டனர். பின்னர் அணை பூங்காவில் உற்சாகத்துடன் பொழுதை கழித்தனர். அதேபோல இடைப்பாடி பூலாம்பட்டிக்கு ஏராளமானோர் வந்திருந்த நிலையில் ஆற்றில் விசைப்படகு சவாரி சென்று மகிழ்ந்தனர்.

Related Stories: