×

நீட் வினாத்தாள் கசிவின் மூளையாக செயல்பட்ட புனே பேராசிரியர் அதிரடி கைது: பயிற்சி வகுப்புகளில் கேள்வித்தாளை வெளியிட்டது அம்பலம்

புனே: நீட் வினாத்தாள் கசிவின் மூளையாக செயல்பட்ட புனே பேராசிரியர் பி.வி.குல்கர்னி அதிரடியாக கைது செய்யப்பட்டார். 2026- 27-ம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்காக கடந்த மே 3ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் கேட்கப்பட்ட 200 வினாக்களில் 80%க்கும் கூடுதலான வினாக்கள் தேர்வுக்கு பல நாள்கள் முன்பே ராஜஸ்தானில் வெளியாகி விட்டதாகவும், இது தொடர்பாக அம்மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதை தொடர்ந்து நீட் தேர்வு அதிரடியாக ரத்து செய்யப்பட்டது.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த மங்கிலால் பிவால், விகாஸ் பிவால், தினேஷ் பிவால் ஆகிய 3 பேருடன், குருகிராமைச் சேர்ந்த யாஷ் யாதவ் மற்றும் நாசிக்கைச் சேர்ந்த கைர்னார் ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது. மேலும் மகாராஷ்டிரா மாநிலம் அகில்யநகரைச் சேர்ந்த தனஞ்சய் லோகண்டே மற்றும் அவரது கூட்டாளியான புனேயைச் சேர்ந்த மனிஷா வாக்மார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். லோகண்டே என்பவர் வாக்மாரேவிடமிருந்து வினாத்தாளைப் பெற்று, அதனை நாசிக்கைச் சேர்ந்த சுபம் கைர்னாருக்குக் கைமாற்றியதாகவும், கைர்னார் அதனை யாஷ் யாதவிடம் வழங்க, யாதவ் அதனை மேலும் பலரிடையே பரப்பியதாகவும் சிபிஐ விசாரணையில் தெரிய வந்தது.

இதில் ஜெய்ப்பூரை சேர்ந்த மங்கிலால் பிவாலின் இளைய மகனுக்காக நீட் வினாத்தாளை ரூ. 10 முதல் 12 லட்சம் வரை பணம் கொடுக்கத் தயாராக இருப்பதாக ஏப்ரல் மாதம் யாதவிடம் கைர்னார் தெரிவித்துள்ளார். இந்த அடிப்படையில் ரூ.10 லட்சம் வாங்கிக்கொண்டு வினாத்தாள் கசியவிடப்பட்டது அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் வினாத்தாள் கசிவின் முக்கிய குற்றவாளியான புனேவை சேர்ந்த வேதியியல் பேராசிரியர் பி.வி. குல்கர்னி நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இவர் பல ஆண்டுகளாக தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் வினாத்தாள்களைத் தயாரிக்கும் குழுக்களில் பணியாற்றி வந்துள்ளார். இவர் புனேயில் உள்ள தனது இல்லத்திலிருந்து காவலில் எடுக்கப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். ரகசிய ஆவணங்களை அணுகும் சிறப்பு அதிகாரம் தனக்கு இருந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட குல்கர்னி, ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் தனது வீட்டில் சிறப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்தினார்.

மே 3 அன்று நடைபெற்ற நீட் தேர்வில் இடம்பெற்றிருந்த கேள்விகள், அதற்கான விருப்பத் தேர்வுகள் மற்றும் விடைகளை அவர் தனது மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். ஏப்ரல் கடைசி வாரத்தில் மற்றொரு குற்றவாளியான மனிஷா வாக்மாரின் உதவியுடன் அவர் மாணவர்களைத் திரட்டினார்;.மனிஷா வாக்மார் மே 14 அன்று சிபிஐயால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் குல்கர்னி நடத்திய பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்வதற்காக மாணவர்களிடம் பல லட்சம் வசூலிக்கப்பட்டது.

மேலும் மாணவர்களுக்கு இந்த வினாத்தாளை சப்ளை செய்த இடைத்தரகர்களையும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் நீட் வினாத்தாள் கசிவின் ​​குற்றத்தை நிரூபிக்கக்கூடிய பல ஆவணங்கள், மின்னணுச் சாதனங்கள் மற்றும் அலைபேசிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருட்களின் மீதான விரிவான தடயவியல் மற்றும் தொழில்நுட்பப் பகுப்பாய்வுப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

* பயிற்சி மைய இயக்குநரிடம் விசாரணை
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மகாராஷ்டிராவின் லத்தூரில் உள்ள நீட் பயிற்சி மைய இயக்குனரிடம் சிபிஐ நேற்று விசாரணை நடத்தியது. ரேணுகை கெமிஸ்ட்ரி கிளாசஸ் பயிற்சி மையத்தின் இயக்குனர் சிவராஜ் மோட்டேகான்கரின் இல்லத்திற்கு சென்ற சிபிஐ குழு அவரிடம் விசாரணை நடத்தியது.

Tags : Pune ,Ambalam ,PV Kulkarni ,NEET ,MBBS ,
× RELATED தேர்தலில் எஸ்ஐஆர் நெருக்கடி ஓய்ந்த...