பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்.!!

டெல்லி: பல ஆண்டுகளுக்கு பிறகு நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் இந்த எரிபொருள் விலை உயர்விற்கு ஏற்ப அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் – அமெரிக்கா மோதல் துவங்கிய நிலையில் ஹோர்முஸ் நீரிணை முற்றிலுமாக முடங்கியது. அவ்வப்போது ஒருசில கப்பல்கள் அனுமதிக்கப்பட்டாலும் முற்றிலும் இயல்பு நிலை திரும்பாததால் கிட்டத்தட்ட 10 வாரங்களாக, எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு செலவுகள் அதிகரித்த போதிலும், பழைய விலையிலேயே எரிபொருளை விற்று வந்தன.

அதாவது அவை தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டங்களை தாங்கி கொண்டு பெட்ரோல், டீசலை பழைய விலைக்கே விற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கும் மேல் சமாளிக்க முடியாது என்ற நிலையிலேயே நாட்டில் எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் (பெட்ரோல், டீசல்) விலை உயரும் போது அதற்கேற்ப போக்குவரத்து செலவுகளும் அதிகரிக்கின்றன. இது சந்தையில் உள்ள அனைத்துப் பொருட்களின் விலையையும் நேரடியாக பாதிக்கிறது.

இது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள், மளிகை, பொதுப்போக்குவரத்து, உணவுகள் என பலவற்றின் விலையை அதிகரிக்க செய்யும். அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பது என்பது குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் செலவிட கூடிய வருமானத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் அவர்களிடையே நிதி சார்ந்த கவலையையும் அதிகரிக்க செய்யும். அதே போல குறிப்பாக சரக்கு போக்குவரத்து, விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளுக்கு டீசல் மிக முக்கிய ஆதாரமாக இருப்பதால், எரிபொருள் விலை உயர்வு இறுதியில் நுகர்வோர் மீதான சுமையாக மாறும் என்ற கவலை எழுந்துள்ளது. எனவே அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்காமல் தடுக்க உரிய நடவடிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Related Stories: