பாப்பிரெட்டிப்பட்டி, மே 15: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பொம்மிடி ஊராட்சி வடசந்தையூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டு சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தைக்கு சேலம் மாவட்டம ஓமலூர், ஏற்காடு, தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கம்பை நல்லூர், கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் ஆடுகளை விற்பனைக்கு ஓட்டிவந்தனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்க சந்தைக்கு வந்தனர்.
அதிகாலை சந்தை கூடியது முதலே வியாபாரம் களை கட்டியது. 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையும், கிடாய் ரூ.8,500ல் இருந்து ரூ.20,000 வரையும் விற்பனையானது. கடந்த வாரம் சந்தையில் ரூ.25 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையானது. நேற்றையசந்தையில் 400க்கும் மேற்பட்ட ஆடுகள் ரூ.30 லட்சத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
