×

நாகையில் மீனவர், பெண் அடுத்தடுத்து படுகொலை

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து மீனவர், பெண் படுகொலை செய்யப்பட்டனர். நாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேசன் குட்செட் அருகே 40வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக நகர காவல் நிலையத்திற்கு நேற்று அதிகாலை தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை வடக்குத்தெருவை சேர்ந்த அருண்குமார் (40) என்பதும், மீனவரான இவர், கேரளத்தில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்ததும், சில தினங்களுக்கு முன்பு அருண்குமார் தாய் இறந்ததால் துக்க நிகழ்ச்சிக்கு நாகப்பட்டினம் வந்துள்ளார். மீன்பிடி தடைக்காலம் என்பதால் கேரள செல்லாமல் இருந்ததும், நேற்றுமுன்தினம் இரவு தனது நண்பர்களுடன் வீட்டை விட்டு வெளியே சென்றதும், இரவு வீடு திரும்பாத அருண்குமார் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

பின்னர் போலீசார், கொலையான அருண்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து சந்தேகத்தின் பேரில் நண்பர்கள் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகப்பட்டினம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே அரசு மருத்துவமனை நுழைவாயில் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு நேற்று அதிகாலை தகவல் வந்தது.

அதன் பேரில் போலீசார் சென்று விசாரணை நடத்தியதில், கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த சித்ரா(40) என்பதும், நாகப்பட்டினம் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த தகராறில் சித்ராவை கல்லால் அடித்து தாக்கியதும், ரத்தகாயத்தில் இருந்த அவரை அங்கிருந்து தூக்கி கொண்டு வந்து அரசு மருத்துவமனை நுழைவாயிலில் போட்டு சென்றதும் தெரியவந்தது.

பின்னர் போலீசார், சித்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகப்பட்டினத்தில் அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து நடந்த 2 கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Nagapattinam ,Nagapattinam railway station ,
× RELATED சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் RPF...