சென்னை: விண்ணை முட்டும் காய்கறி விலையை தவெக அரசு விரைந்து கட்டுப்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சென்னையின் கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை பகுதியில் கடந்த சில நாட்களாக காய்கறி விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் காய்கறிகள் வரத்து வந்த நிலையில், தற்போது கோடைகால வெப்பம் அதிகரித்ததாலும் விளைச்சல் குறைந்ததாலும் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நேற்று பல்வேறு காய்கறிகளின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக கேரட் கிலோ ரூ.40ல் இருந்து ரூ.80 ஆகவும், பீன்ஸ் ரூ.80ல் இருந்து ரூ.150 ஆகவும் உயர்ந்துள்ளது. வெங்காயம் மற்றும் தக்காளி தலா ரூ.20ல் இருந்து ரூ.40ஆக உயர்ந்துள்ளன. மேலும் கத்தரிக்காய் ரூ.40, வெண்டைக்காய் ரூ.60, புடலங்காய் ரூ.50 என விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்களை அதிகம் அதிர்ச்சியடையச் செய்திருப்பது எலுமிச்சை விலை உயர்வே. கடந்த வாரம் வரை ரூ.50க்கு விற்கப்பட்ட எலுமிச்சை தற்போது ரூ.250 வரை உயர்ந்துள்ளது.
இந்த திடீர் விலை உயர்வால் இல்லத்தரசிகள், நடுத்தர மக்கள், சிறிய உணவகங்கள் மற்றும் சாலையோர ஓட்டல் உரிமையாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தினசரி உணவுப் பொருட்களின் செலவு கணிசமாக அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு இந்த விலை உயர்வை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்ற கேள்வி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அரசு சார்பில் நேரடி காய்கறி விற்பனை மையங்கள் அமைத்தல், உழவர் சந்தைகள் மூலம் குறைந்த விலையில் காய்கறிகள் வழங்குதல், வெளிமாநில வரத்துக்கு போக்குவரத்து சலுகைகள் அறிவித்தல், விவசாயிகளுக்கு உடனடி ஆதரவு வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘வெளிமாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் விளைச்சல் குறைந்துள்ளது. அதேபோல் லாரி போக்குவரத்து செலவுகளும் உயர்ந்துள்ளன. இதனால் அடுத்த சில நாட்களும் காய்கறி விலை உயர்வு தொடரும் சூழல் உள்ளது. மேலும், விலை உயர்வை கட்டுப்படுத்த மாநில அரசு மாவட்ட வாரியாக கண்காணிப்பு குழுக்கள் அமைத்து கையிருப்பு மற்றும் செயற்கை தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.
