×

வளைகாப்பு விருந்து சாப்பிட்ட 40 பேர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் புலந்தசாஹர் மாவட்டம் சல்ஹவான் கிராமத்தில் நேற்று கர்ப்பிணி பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வளைகாப்பு நிகழ்ச்சிக்குப்பின் உணவு விருந்து நடைபெற்றது. இதில், நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலரும் விருந்தில் பங்கேற்று உணவு சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில், உணவு அருந்திய 40-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட நபர்கள், முதலில் ஜஹாங்கிராபாத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்; பின்னர் அவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த விருந்தில் பரிமாறப்பட்ட உணவு மாதிரிகளைச் சேகரித்துள்ளனர். அந்த விழாவில் பரிமாறப்பட்ட உணவில் ஏதேனும் உடல்நலத்திற்கு ஆபத்தான கூறுகள் உள்ளனவா என்பதைத் தீர்மானிப்பதற்காக, இந்த மாதிரிகள் தற்போது ஒரு ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

முதற்கட்ட விசாரணையில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதாலேயே அனைவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரது உடல்நிலையும் சீராகவும், ஆபத்துக் கட்டத்தைத் தாண்டியும் உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags : Lucknow ,Salhawan ,Bulandsahar district ,Uttar Pradesh ,
× RELATED நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது