×

திருப்போரூரில் 35 ஆண்டுகள் இயங்கிய தொழிற்சாலை மூடல்: 100 பேர் வேலையிழப்பு

திருப்போரூர்: திருப்போரூரில் 35 ஆண்டு காலம் செயல்பட்ட தொழிற்சாலை மூடப்படவுள்ளதால், 100க்கும் ேமற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். கேளம்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம் வரை ஓ.எம்.ஆர். சாலைக்கும், கிழக்கு கடற்கரை சாலைக்கும் இடையே உப்பளம் உள்ளது. இங்கு, உப்பு உற்பத்தி செய்யப்பட்டு மருந்து மற்றும் உணவுப் பொருள் தயாரிக்க தூத்துக்குடி மற்றும் வேதாரண்யம் போன்ற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. இந்த தொழிலை சார்ந்து கடந்த 1991ம் ஆண்டு டி.சி.டபிள்யூ என்ற தனியார் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு பிறகு இந்த தொழிற்சாலையை குஜராத் ஹெவி கெமிக்கல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் வாங்கி நடத்தி வந்தது. இதன் தலைமை அலுவலகம் குஜராத்தில் உள்ளது.

சென்னையில் ஒரு அலுவலகமும், வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி மையமும் செயல்பட்டு வந்தது. திருப்போரூரில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட தொழிற்சாலை கட்டப்பட்டு வேதாரண்யம் மற்றும் தூத்துக்குடியில் இருந்து கல் உப்பு கொண்டு வரப்பட்டது. அவற்றை அரைத்து தூள் உப்பாக மாற்றி பல்வேறு தனியார் நிறுவனங்களின் பெயரில் பேக்கிங் செய்து அந்தந்த நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது. ஒப்பந்த தொழிலாளர்கள், நிரந்தர தொழிலாளர்கள், அலுவலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்தனர்.
இந்தநிலையில், தொழிற்சாலைக்கு வந்த ஆர்டர்கள் படிப்படியாக குறைந்தன. கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழை, 2016ம் ஆண்டு வீசிய வர்தா புயல் ஆகியவற்றால் தொழிற்சாலை வளாகம் பெருத்த சேதமடைந்தது. இதனால் படிப்படியாக தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. கடைசியாக ஒப்பந்த ஊழியர்கள் 30 பேரும், நிரந்தர தொழிலாளர்கள் 17 பேரும் வேலை செய்து வந்தனர். சென்னை அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொழிற்சாலை மீது பயிற்சி விமானம் விழுந்தது. இதில் தொழிற்சாலையில் பல்வேறு பொருட்கள் சேதம் அடைந்தது. இதையடுத்து பேக்கிங் பணி நிறுத்தப்பட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் வேலைக்கு வந்தபோது தொழிற்சாலை இன்றுடன் தனது உற்பத்தியை நிறுத்திக் கொள்வதாகவும், அனைவருக்கும் உரிய செட்டில்மென்ட் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நிரந்தர ஊழியர்களுக்கு 3 மாத ஊதியம் வழங்கப்பட்டு அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த மாதம் ஊதியம் மட்டும் வழங்கப்பட்டது. சுமார் 35 ஆண்டுகளாக நடைபெற்று வந்த தொழிற்சாலை மூடப்பட்டதால், திருப்போரூர் தனது அடையாளங்களுள் ஒன்றை இழந்து விட்டதாக தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags : Thiruporur ,Kelambakkam ,Mamallapuram ,OMR road ,East Coast Road ,
× RELATED ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு