- பி வேலுமணி
- சி. விஜயபாஸ்கர்
- ஆர்.
- காமராஜ்
- நாதம் விஸ்வநாதன்
- சென்னை
- ச.
- குத்கா
- பி. வேலுமணி
- ஆர்.காமராஜ்
- திரு
- Vijayabaskar
- லஞ்சம் எதிர்ப்புத் துறை
- CBCID
- சிபிஐ
- அமலாக்க
சென்னை: டெண்டர் முறைகேடு, வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்தது, குட்கா வழக்கு, உணவு கொள்முதல் செய்தது உள்ளிட்ட வழக்குகளில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், ஆர்.காமராஜ், நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை, சிபிசிஐடி, சிபிஐ, அமலாக்கத்துறையில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், தங்களை காப்பாற்றி கொள்ளும் வகையில் இவர்கள் தங்களது ஆதரவு எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக ஆட்சி 2015-18ம் ஆண்டு காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தார். அவரது பணிக்காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் தெரு விளக்குகளை எல்இடி பல்புகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி அப்போதைய சந்தை மதிப்பில் ரூ.600 விலையில் இருந்த எல்இடி விளக்குகளை டெண்டர் எடுத்த நிறுவனங்கள் ஒரு எல்இடி விளக்கு ரூ.4,500 என வாங்கியதாக கணக்கு காட்டி மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் மூலம் டெண்டர் எடுத்த கே.சி.பி. இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனத்தின் மூலம் அரசுக்கு ஒரு எல்இடி விளக்குகள் ரூ.3,900 வரை இழப்பு ஏற்பட்டது. அதன்படி கடந்த 2015 முதல் 2018ம் ஆண்டு வரை அதாவது 3 ஆண்டுகள் எல்இடி விளக்குகள் வாங்கியதில் ரூ.500 கோடி வரை ஊழல் நடந்தது அம்பலமானது. டெண்டர் எடுத்த நிறுவனங்கள் அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணியின் பினாமி நிறுவனங்கள் என்றும், அந்த நிறுவனங்கள் டெண்டர் எடுக்கும் வகையில் சில விதிமுறைகளும் திருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அளித்த புகாரின்படி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியதில் பினாமி நிறுவனங்களுக்கு ஆதரவாக டெண்டர் விதிகளில் திருத்தம் செய்தது மற்றும் எல்இடி விளக்குகள் கொள்முதல் செய்ததில் பல நூறு கோடி முறைகேடு நடந்தது உறுதியானது. அதைதொடர்ந்து எஸ்.பி. வேலுமணி மற்றும் டெண்டர் எடுத்த நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 13ம் ேததி எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களில் சோதனை நடத்தி வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. அதேபோல், சென்னை மாநகராட்சியில் கடந்த 2018ம் ஆண்டு மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்து எஸ்.பி.வேலுமணி மழைநீர் வடிகால் பணிகள் செய்ய டெண்டர் விடப்பட்டது. டெண்டர் எடுத்த நிறுவனத்திற்கு ஆதரவாக ஒப்பந்த புள்ளி வழங்கியதன் மூலம் ரூ.26.61 கோடி முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியதில் பினாமி நிறுவனத்திற்கு டெண்டர் விடும் வகையில் சென்னை மாநகராட்சியை சேர்ந்த 11 பொறியாளர்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது.
அதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சியில் பணியாற்றிய பொறியாளர்கள் உள்பட 11 பேர் மீது ரூ.26.61 கோடி முறைகேடு மற்றும் எல்இடி விளக்கு முறைகேடு என மொத்தம் ரூ.98.25 கோடி மோசடி செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், அதிமுக ஆட்சி காலத்தில் எஸ்.பி.வேலுமணி 2016-21ம் ஆண்டு காலத்தில் அமைச்சராக பணியாற்றினார். அவரது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.58.23 கோடி சொத்து சேர்த்தது தொடர்பாக எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர், அவரது பினாமிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த டெண்டர் முறைகேடு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது என மொத்தம் 2 வழக்குகள் லஞ்ச ஒழிப்புத்துறையில் நிலுவையில் உள்ளது.
2026ம் ஆண்டு தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும், அப்போது தன் மீது போடப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் இருந்து தப்பித்து விடலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நினைத்தார். ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் விஜய் கட்சி தவெக ஆட்சிக்கு வந்தது. அதிமுக வெறும் 47 எம்எல்ஏக்களுடன் இந்த தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
தேர்தல் நேரத்தில் விஜய், முன்னாள் அமைச்சர்கள் ஊழல் வழக்குகளை மீண்டும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி விஜய் லஞ்ச ஒழிப்புத்துறையில் முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் தொடர்பான கோப்புகளை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் எஸ்.பி.வேலுமணி மீதான இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் இறுதிகட்ட விசாரணையில் இருப்பது தெரியவந்தது.
சி.விஜயபாஸ்கர் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்ர் அதிமுக ஆட்சி காலத்தில் 2016-21ம் ஆண்டு சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றினார். தனது பணிக்காலத்தில் சி.விஜயபாஸ்கர் தனது வருமானத்தை காட்டிலும் ரூர.35.79 கோடி சொத்து குறிப்பு வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து கடந்த 2023ம் ஆண்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த சொத்து குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது சி.விஜயபாஸ்கர் மனைவி ரம்யா வீட்டில் இருந்து ரூ.23.85 லட்சம் ரொக்க பணம், 4.87 கிலோ தங்கம் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதவிர சி.விஜயபாஸ்கர் மீது தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை செய்ய குட்கா வியாபாரிகளிடம் பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியது தொடர்பாக சிபிஐ வழக்கு ஒன்று உள்ளது. பணம் மோசடி தொடர்பாக ஒன்றிய அமலாக்கத்துறையில் வழக்கு ஒன்றும், திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி தொடங்க அடிப்படை வசதிகள் இல்லாத கல்வி நிறுவனத்திற்கு மருத்துவ கல்லூரி தொடங்க தடையில்லா சான்று வழங்கியது தொடர்பான வழக்கு என முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கரூர் மாவட்டத்தில் மேலக்கரூர் சார்பதிவாளர் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலம் அபகரித்த வழக்கில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவரது சகோதரர் சேகர், பிரவீன் உள்ளிட்ட 13 பேர் மீது மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்தனர். தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிதிமன்றத்தின் நிபந்தனை ஜாமீனில் வெளியே உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அனுமதியின்றி ஆற்று மணலை கொட்டி வைத்திருந்ததாக எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான வழக்கு தற்போது சிபிசிஐடியில் நிலுவையில் உள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
நத்தம் விஸ்வநாதன்
முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கடந்த 2017ம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தார். இவரது பணிக்காலத்தில் சூரிய மின் சக்தி திட்டத்துக்காக அதிகளவில் நிலம் கையப்படுத்தப்பட்டது. அந்த வகையில் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்க நிலம் வாங்கியதில் ரியஸ் எஸ்டேட் வியாபாரி ஒருவரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக நத்தம் விஸ்வநாதன் மீது திருச்சியில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அமைச்சராக இருந்த போது, ரூ.3 கோடி மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது.
ஆர்.காமராஜ்
2011-21ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சராக பணியாற்றினார். அவரது பணிக்காலத்தில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக ரூ.127.49 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது விநியோகத்திற்கான உணவு பொருட்கள் கொள்முதல் செய்ததில் விலையை உயர்த்தி பொருட்கள் கொள்முதல் செய்ததாக ஆர்.காமராஜ் மீது ரூ.350 கோடி ஊழல் புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் உள்ளது. ஆர்.காமராஜ் மற்றும் அவரது மகன்களான டாக்டர்கள் இனியன், இன்பன் ஆகியோர் பினாமி நிறுவனம் மூலம் தஞ்சாவூரில் ‘ காமாட்சி மெடிக்கல் சென்டர்’ என்ற பெயரில் பன்னோக்கு மருத்துவமனை உள்ளிட்ட சொத்துகள் வாங்கியதாக புகாரும் லஞ்ச ஒழிப்புத்துறையில் நிலுவையில் உள்ளது.
இதுபோன்று லஞ்ச ஒழிப்புத்துறை, சிபிசிஐடி, சிபிஐ, அமலாக்கத்துறையில் பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள தற்போது எம்எல்ஏவாக வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், தோல்வி அடைந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், ஆர்.காமராஜ் உள்ளிட்டோ தங்கள் வழக்குகளில் இருந்து தப்பிக்கும் வகையில், எடப்பாடி பழனிசாமி மீது தேர்தல் தோல்வி மற்றும் ஆட்சி அமைப்பதற்கு கூட்டணி தொடர்பாக காரணங்களை கூறி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் இணைந்து எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கரன், எம்.ஆர்.விஜயபாஸ்கரன், ஆர்.காமராஜ், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் தங்களது ஆதரவு எம்எல்ஏக்களுடன் தவெகவில் இணைந்துள்ளதாக எஸ்.பி.வேலுமணி நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
