×

கோடை விடுமுறையில் செல்போனில் மூழ்கிக்கிடக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்: பரிதவிப்பில் பெற்றோர்

பல்லாவரம்: கோடை விடுமுறையில் பள்ளி, கல்லூரிகள் அனைத்துக்கும் விடுமுறைவிடப்பட்டுள்ளது. விடுமுறையில் வசதிபடைத்தவர்கள் ஊட்டி, கொடைக்கானல் மற்றும் குளிர்தேச வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். அவ்வாறு சுற்றுலா செல்ல வசதி யில்லாத குடும்பத்தினர் இருந்த இடத்தில் இருந்து, தங்களது அன்றாட வேலைகளை கவனித்து வருகின்றனர். வீடுகளில் இருக்கும் பெரும்பாலான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஓய்வு நேரத்தில் பயனுள்ள வகையில் கழிக்காமல் செல்போனிலேயே மூழ்கிக் கிடந்து, தங்களது நேரத்தையும், பொழுதையும் வீணாக கழித்து வருவதாக பெற்றோர் மனம் வருந்தி வருகின்றனர்.

ஒரு சில மாணவ, மாணவிகளோ விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் யோகா, பரதம், நீச்சல், சிலம்பம், கராத்தே போன்ற விளையாட்டுகளை கற்பதில் ஆர்வம்காட்டி வந்தாலும்கூட, பெரும்பாலான குழந்தைகள் செல்போனில் மூழ்கி இருப்பதை காண முடிகிறது. இதன்மூலம் இன்றைய தலைமுறையினருக்கு இளம் வயதிலேயே பார்வைத்திறன் குறைபாடு, உடல் சோர்வு மற்றும் சிந்திக்கும் திறன் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

பெற்றோர் எவ்வளவுதான் கண்டிப்புடன் செல்போன்கள் கொடுக்க மறுத்தாலும் சண்டை, சச்சரவு ஏற்படுகிறது. இதற்கு பயந்தே சில வீடுகளில் உள்ள பெற்றோர், தங்களை பிள்ளைகள் தொந்தரவு செய்யாமல் இருந்தாலேபோதும் என்ற மனநிலைக்கு வந்து, செல்போன் பார்ப்பதை கண்டும்காணாமல் இருந்துவிடுகின்றனர். செல்போன் பார்ப்பதில் வயது வித்தியாசமின்றி 2 வயது குழந்தை முதல் முதியவர் வரை மூழ்கிக்கிடக்கின்றனர். நவீன விஞ்ஞானம் உள்ளங்கையில் உலகத்தை செல்போன் வாயிலாக கொண்டு வந்தபோதிலும், ஒரு சிலர் நல்லமுறையில் வாழ்வாதாரத்தை உயர்த்திகொண்டாலும் பெரும்பாலானோர் கேளிக்கை வீடியோக்கள், வீடியோ கேம்களை கண்டுகளித்து நேரம், காலம் இல்லாமல் முழுநேரமும் செல்போனே கதி என உடலையும் மனதையும் வருத்திக்கொள்கின்றனர்.

இதே நிலை நீடித்தால் வருங்கால இளைஞர்கள் எவ்வாறு வாழ்க்கையில் சிறந்து விளங்க முடியும். இந்தநிலை மாறவேண்டும் என்றால் மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர் மீண்டும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். இதன் மூலம் அவர்களின் பொதுஅறிவுத்திறன் வளரும். மேற்படிப்பிற்கு வழிவகை செய்யும். எதிர்காலத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற போட்டி தேர்வுகளில் எளிதாக வெற்றிபெற முடியும். எதிர்காலம் பிரகாசமாக மாறும். விடுமுறையில் வெளியூர், வெளிநாடு போன்ற இடங்களுக்கு அழைத்து செல்ல முடியாவிட்டாலும் உள்ளூரில் இருக்கும் பழமையான ஆலயங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு அழைத்து சென்று அவற்றின் அருமை, பெருமைகளை எடுத்து கூறலாம்.

இதனால் நம்நாட்டின் பாரம்பரியம், வரலாற்றை மாணவர்கள் அறிந்துகொள்ளமுடியும். விடுமுறையில் தங்களது நெருங்கிய உறவினர்களின் வீடுகளுக்கு அழைத்து செல்லலாம். இதன்மூலம் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகம் கிடைக்கும். பழைய முறையில் குடும்ப ஒற்றுமை மேம்படும். மரங்கள், செடிகள் நட்டு வைத்து வளர்ப்பதில் ஆர்வம்காட்ட வைக்கலாம். மரங்கள் வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள், பயன்கள் குறித்து பிள்ளைகளுக்கு எடுத்துகூறலாம். இதன்மூலம் நாட்டின் இயற்கை சூழல் பாது காக்கப்படும். வருங்கால சந்ததிகள் செல்போன்களின் பாதிப்பில் இருந்து தங்களை காத்து, தெளிவான சிந்தனையுடன், ஆரோக்கிய மானவர்களாக உருவாக வழிவகுக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக செல்போன் ஒரு சிறந்த தகவல் தொடர்பு சாதனமேதவிர, வாழ்வை முடக்கும் கருவியல்ல என்பதை நாம் புரிந்தாலேபோதும். செல்போன் ஆட்கொள்வதில் இருந்து நாம் நம்மை தற்காத்துக்கொள்ள முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.

Tags : Pallavaram ,Ooty ,Kodaikanal ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என...