×

717 மதுக்கடைகள் மூடல்: தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு எஸ்டிபிஐ கட்சி வரவேற்பு: படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரிக்கை!

 

சென்னை: 717 மதுக்கடைகள் மூடல்: தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு எஸ்டிபிஐ கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்திருந்த 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ள முதல்வரின் நடவடிக்கை மிகுந்த வரவேற்புக்குரியது.

மது உள்ளிட்ட போதை அரக்கனின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழக இளைஞர்களையும், அதன் விளைவாகச் சீரழியும் ஏழைக் குடும்பங்களையும் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். எனவே, தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை ஒரு தொடக்கமாகக் கொண்டு, தமிழகத்தில் படிப்படியாகப் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் உன்னத இலக்கை நோக்கி இந்த அரசு உறுதியுடன் நடைபோட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

போதையற்ற தமிழகத்தை உருவாக்கி, வருங்காலத் தலைமுறையினரின் வாழ்வை ஒளிரச் செய்யத் தேவையான அனைத்து ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனவும், சமூக நலன் சார்ந்த இத்தகைய முடிவுகளுக்குத் எஸ்டிபிஐ கட்சி என்றும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags : STBI ,Tamil Nadu ,Chief Minister ,Chennai ,state ,president ,Mohammed Mubarak ,
× RELATED நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க...