×

விமான நிலையம் – கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ திட்ட பணிகள் தொடக்கம்

 

 

சென்னை: சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இணைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் மின்சார ரயில் மூலமாக வண்டலூர் சென்று அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்கின்றனர். மேலும் மாநகர பேருந்துகள் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்றடைகின்றனர். இதனால் பயணிகளின் சிரமத்தை குறைக்க சென்னை விமான நிலையம் வரை உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தினந்தோறும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், அந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை திட்டம் கொண்டு வரப்பட்டால் போக்குவரத்து நெரிசலை முற்றிலும் ஒழிக்க முடியும் என அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து, கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து பல ஆண்டுகள் ஆன நிலையிலும் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்தது.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 1ல் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயிலை மேம்பால சாலையுடன் இணைத்து நீடிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டத் துறை செயலாளரிடம் மெட்ரோ நிர்வாகம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க ரூ.9,335 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ வழித்தடத்தில் சென்னை விமான நிலையம், பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி காலனி, தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகிய 13 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளது.

மேலும் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் வழியாகச் செல்லும், இது கிளாம்பாக்கம் பேருந்து முனையம், விமான நிலையம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையம் போன்ற முக்கிய போக்குவரத்து மையங்களுக்கு இணைப்பை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை 15.46 கிலோ மீட்டர் மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் நிலம் கையகப்படுத்தும் பணிகளை தொடங்கவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு அரசு அனுமதி வழங்கியது. ஆனால், பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்ட இந்த திட்ட பணிகள், தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் விமான நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் இடையே நேரடி ரயில் இணைப்பு இல்லாததால் பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வாகவே புதிய மெட்ரோ திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 15 கிலோமீட்டர் நீளத்தில் அமையவுள்ள இந்த பாதையில் 12 மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை நேரடி மெட்ரோ பயணம் சாத்தியமாகும். இதன் மூலம் ஜிஎஸ்டி சாலையில் நீண்டகாலமாக இருந்து வரும் போக்குவரத்து நெரிசலும் குறையும்.

இந்த திட்டத்திற்கான விரிவான அறிக்கை ஏற்கனவே ஒன்றிய அரசிடம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலைத் துறை, விமான நிலைய நிர்வாகம் மற்றும் குடிநீர் வாரியம் உள்ளிட்ட பல துறைகளுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. நில அளவீடு மற்றும் பாதை வரைபடப் பணிகளும் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, தற்போது ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளது,’ என்றனர்.

Tags : GLAMPAKAM ,Chennai ,Rail ,Chennai Airport ,Klambakkam Bus Station ,Vandalur ,
× RELATED போதைப் பொருட்கள் தடுப்புப் படை: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு