பெருங்களத்தூர், தாம்பரம் பகுதியில் நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக மீண்டும் வேகமெடும் புறவழிச்சாலை திட்டம்

 

 

சென்னை, மே 12: சென்னையின் தெற்கு நுழைவு பகுதியான பெருங்களத்தூரில் நீண்ட காலமாக நீடித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, கிழக்கு தாம்பரம் புறவழிச்சாலை திட்டம் மீண்டும் வேகமெடுத்துள்ளது. தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் கனரக வாகனங்கள், பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் பகுதிகளில் நுழையாமல் மாற்றுப்பாதையில் செல்லும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற போக்குவரத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டமாக இது பார்க்கப்படுகிறது.

மொத்தம் 9 கிலோ மீட்டர் நீளத்தில் 6 வழிச்சாலையாக உருவாகும் இந்த பாதை, ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பீர்க்கன்காரணை பழைய காவல் நிலையம் அருகே தொடங்கி, சதானந்தபுரம், ஆலப்பாக்கம், நெடுங்குன்றம், திருவஞ்சேரி, ராஜகீழ்ப்பாக்கம் மற்றும் சேலையூர் வழியாக தாம்பரம் – வேளச்சேரி சாலையை இணைக்கிறது. இதன் மூலம் தென்சென்னை மற்றும் ஐ.டி. வழித்தட பகுதிகளுக்கு நேரடி இணைப்பு கிடைக்கிறது. திட்டத்தின் முதல்கட்ட பணிகளுக்காக 2013ம் ஆண்டு சேலையூர் முதல் திருவஞ்சேரி வரை 3 கிலோ மீட்டர் நீளப்பகுதியில் ரூ.27.5 கோடி செலவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தொடர்ந்து திருவஞ்சேரி முதல் மப்பேடு வரை 1.4 கிலோமீட்டர் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பெருங்களத்தூர் முதல் அகரம்தென் சாலை சந்திப்பு வரை 26 கட்டிடங்கள் அகற்றப்பட்டதுடன், 23 இடங்களில் நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு சாலை அமைப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. தற்போது அகரம் தென் சாலை அம்பேத்கர் நகர் சந்திப்பில் இருந்து ராஜகீழ்ப்பாக்கம் ஏரி வழியாக வேளச்சேரி சாலை வரை 1,442 மீட்டர் நீளத்தில் 6 வழிச்சாலை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. ரூ.208.31 கோடி மதிப்பீட்டில், 23 மீட்டர் அகலத்தில் உருவாகும் இந்த மேம்பாலம் 18 மாதங்களில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக ராஜகீழ்ப்பாக்கம் ஏரி பகுதியில் இருந்த 126 கட்டிடங்கள் அகற்றப்பட்டு, தற்போது அடித்தள பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்தால், பெருங்களத்தூர் மேம்பாலத்தில் இருந்து நெடுங்குன்றம் வழியாக சதானந்தபுரம், ஆலப்பாக்கம், திருவஞ்சேரி மற்றும் சேலையூர் மார்க்கமாக கனரக வாகனங்கள் நேரடியாக வேளச்சேரி சாலையை அடைய முடியும். இதன் மூலம் தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், 4.46 ஹெக்டேர் வனத்துறை நிலம் பெறுவதற்கான அனுமதி மற்றும் 8.92 ஹெக்டேர் மாற்று நில ஒதுக்கீடு இன்னும் நிறைவு பெறாததால் சில பணிகள் தாமதமாகியுள்ளன.

Related Stories: