காரைக்குடி: தவெக சிவகங்கை கிழக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் டி.கே.பிரபு, நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்று அமைச்சராகி இருக்கிறார். இது கட்சி பேதமின்றி காரைக்குடி தொகுதி மக்களை மிகவும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
ஏனென்றால்1952-ல் தொடங்கி இன்று வரை பல தேர்தல்களை சந்தித்த காரைக்குடிக்கு, இப்போது தான் முதல்முறையாக ஒரு அமைச்சர் கிடைத்துள்ளார். தற்போது அமைச்சராகி இருக்கும் காரைக்குடி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ-வான டி.கே.பிரபு, 42 வயதான பல் மருத்துவர் ஆவார்.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை என நான்கு தொகுதிகள் இருந்தாலும், சட்டமன்ற தேர்தல் நடக்க துவங்கிய காலத்தில் இருந்தே காரைக்குடிக்கு மட்டும் அமைச்சர் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் தான் காரைக்குடி தொகுதிக்கு முதல்முறையாக அமைச்சர் கிடைத்துள்ளார். அமைச்சர் டி.கே.பிரபு தேவகோட்டை அருகே உள்ள இருமதி பகுதியை சேர்ந்தவர் ஆவார். காரைக்குடியில் பல் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.
இவரது குடும்பம் அரசியல் பின்னணி கொண்டது தான். இவர் தந்தை பெயர் துரை. கருணாநிதி, காங்கிரஸ் பாரம்பரியமிக்க குடும்பத்தை சேர்ந்த இவர் முன்னாள் ராணுவ வீரர். டி.கே.பிரபுவின் தாயார் சரஸ்வதி தேவகோட்டை முன்னாள் ஒன்றியத் தலைவர் ஆவார். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். குடும்பமே அரசியலில் ஊறியிருந்தாலும் முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றது ஒரு ஜாக்பாட் என்றால், மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி கிடைத்திருப்பது அவருக்கு மட்டுமல்ல காரைக்குடிக்கே கிடைத்திருக்கும் ஒரு மெகா ஜாக்பாட்-ஆகவே பார்க்கப்படுகிறது.
1952 முதல் 2021-ஆம் ஆண்டு வரை 16 தேர்தல்களைச் சந்தித்த காரைக்குடி தொகுதிக்கு, ஒரு அமைச்சர் கூட இல்லாமல் இருந்த நிலையில், பல ஆண்டுகள் ஏக்கத்தை பிரபு தீர்த்துள்ளதாக செட்டிநாடு மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள். மேலும் காரைக்குடிக்கு அத்தியாவசியமான வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறர்கள்.
