திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பல மணிநேரம் காத்திருந்து அவர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். முன்னதாக வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு போதிய தங்கும் அறைகள் கிடைப்பதில் சிக்கல் இருந்து வருகிறது. இப்பிரச்னையை தீர்ப்பது தொடர்பாக அண்மையில் திருமலையில் அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தின்போது திருமலையில் சுமார் 60,000 பேருக்கு மட்டுமே தங்கும் வசதிகள் உள்ளது. தினமும் மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டுவதால் அனைவருக்கும் தங்குமிடம் வழங்குவது தேவஸ்தானத்திற்கு பெரும் சவாலாகவும், சுமையாகவும் உள்ளதால் இப்பிரச்னைக்கு விரைந்து முற்றுப்புள்ள வைக்கவேண்டும் என பேசினர். அதற்கேற்ப திருப்பதி அலிபிரி மலையடிவார பகுதியில் உள்ள தேவஸ்தான சிற்ப கல்லூரி அருகே சுமார் 25 ஏக்கர் நிலத்தில், ரூ.1,500 கோடி செலவில் ஒருங்கிணைந்த தங்கும் அறை கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டது.
இதில் பக்தர்களுக்கான தங்குமிடம், அன்னபிரசாத கவுன்டர், போக்குவரத்து வசதிகள், சர்வ தரிசன டோக்கன் முன்பதிவு மற்றும் உடமைகள் வைக்கும் கவுன்டர்கள் உட்பட அதிநவீன வசதிகள் கிடைக்க முடிவு செய்யப்பட்டது.
அதில் உலகத்தரம் வாய்ந்த கட்டிடக்கலைஞர்களுடன் இதற்கான திட்டங்கள் தயாரிக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுபற்றி தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், அலிபிரி மலையடிவாரத்தில் பிரம்மாண்ட கெஸ்ட்ஹவுஸ் கட்டப்பட உள்ளது. இங்கு சுமார் 15,000 முதல் 20,000 பேர் வரை தங்குவதற்கு ஏற்ப வசதிகள் செய்யப்பட உள்ளது. பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் அலிபிரியை எளிதில் சென்றடையும் வகையில் இந்த கட்டுமானம் முடிக்கப்படும். அடுத்த 2 மாதங்களில் திட்ட வரைவு தயாரித்து அடிக்கல் நாட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
