புதுடெல்லி: கச்சா எண்ணெய் விலை உயர்வால், தினமும் ரூ.1600 முதல் ரூ.1700 கோடி வரையிலும், 10 வாரங்களில் ரூ.1 லட்சம் கோடியும் இழப்பு ஏற்படுவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கூறி உள்ளன. மேற்கு ஆசியாவில் போர் மூண்டதில் இருந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அதன் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. இதனால் விரைவில் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு அதிகரிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலிம் கார்பரேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பெட்ரோல், டீசல் மற்றுமு் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விற்பனையில் ஒட்டுமொத்தமாக தினமும் ரூ.1,600 கோடி முதல் ரூ.1,700 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. கடந்த 10 வாரங்களில் மொத்த இழப்பு ரூ.1 லட்சம் கோடியை தாண்டி விட்டது. கச்சா எண்ணெய் விலை 50 சதவீதம் உயர்ந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலைகள் கடந்த 2 ஆண்டுகளாக மாற்றப்படாமல் முறையே லிட்டருக்கு ரூ.94.77 மற்றும் ரூ.87.67 என்ற அளவிலேயே தொடர்ந்து விற்கப்பட்டு வருகிறது. சமையல் எரிவாயு விலை கடந்த மார்ச் மாதம் சிலிண்டருக்கு ரூ.60 அதிகரிக்கப்பட்டது. ஆனாலும் அதன் விற்பனை விலை, உற்பத்தி செலவை விட மிகக் குறைவாகவே உள்ளது.
மேற்கு ஆசியா போர் தொடங்கியதில் இருந்து ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பெட்ரோல், டீசல் விலையை 30 சதவீதம் வரை உயர்த்திவிட்டன. ஆனால் கடந்த 10 வாரங்களாக எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் இந்திய சந்தையை பாதுகாத்து வருகின்றன. எனவே எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் இயங்கி வருகின்றன. இந்த சூழலில் எரிபொருள் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், விலை உயர்வின் நேரத்தையும் அளவையும் ஒன்றிய அரசு தான் தீர்மானிக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் ஒன்றிய பெட்ரோல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ரூ.13ல் இருந்து ரூ.3 ஆகவும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.10ல் இருந்து பூஜ்ஜியமாகவும் குறைத்தது. இதனால் ஒன்றிய அரசுக்கு மாதம் ரூ.14,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
