×

‘இந்தியா’ கூட்டணியில் திமுக நீடிக்க வேண்டும்; தவெக-வும் இணைய வேண்டும்: ப.சிதம்பரம் பேட்டி

புதுடெல்லி: தமிழகத்தில் ஆட்சியமைக்க தமிழக வெற்றி கழகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததால் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் ‘இந்தியா’ கூட்டணி நீடிக்க வேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழகத்தில் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், 59 இடங்களில் வென்ற திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் (5 இடங்கள்), கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்குப் பின் விஜய்க்கு ஆதரவு அளித்ததால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தன் கட்சிக்கு வாக்களித்த மற்றும் உதவிய திமுகவுக்கு நன்றி தெரிவிக்காமல் காங்கிரஸ் சென்றது துரோகம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், ‘கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அண்ணா அறிவாலயத்திற்கு வந்து நன்றி கூட தெரிவிக்கவில்லை; அவர்கள் திமுகவுடனான உறவைத் துண்டித்து விட்டுச் சென்றுவிட்டனர்’ என்று தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, 120 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் ஏ.வி.அர்லேகரிடம் விஜய் நேற்று சமர்ப்பித்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், விஜய்யை ஆட்சியமைக்க அழைத்ததோடு இன்று காலை அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றத்தால், டெல்லி நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.,க்களின் இருக்கையை காங்கிரஸ் எம்.பி.,க்களுக்கு அருகில் இருந்து மாற்றக்கோரி கனிமொழி எம்.பி., மக்களவை சபாநாயகருக்குக் கடிதம் எழுதியுள்ளார். கம்யூனிஸ்ட் மற்றும் விசிக தலைவர்கள் தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி விஜய்யுடன் கைகோர்த்திருப்பது தேசிய அளவிலான கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் மாநில அளவில் கட்சிகள் மோதிக்கொண்டாலும், தேசிய அளவில் ‘இந்தியா’ கூட்டணி நீடிக்கிறது. அதேபோல் தமிழகத்திலும் திமுக இந்த கூட்டணியில் நீடிக்கும் என்று நம்புகிறேன். ஸ்டாலின் இதுவரை கூட்டணிக்கு எதிராக எதுவும் கூறவில்லை. தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்கும் தவெக கட்சியையும் இந்த கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்’ என்று தெரிவித்தார். ப.சிதம்பரத்தின் இந்த கருத்து தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : DIMUKA ,INDIA ,DAWEKA ,P. Chidambaram ,New Delhi ,Congress ,Tamil Victory Club ,Tamil Nadu ,Chidambaram ,Vijayin ,Tamil Nadu Assembly Election 108 ,
× RELATED தமிழ்நாட்டில் காலியாகும் எம்பி...