பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பயங்கர ரவுடி போர்ச்சுக்கலில் தலைமறைவாக இருந்த அபய் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தல்

 

புதுடெல்லி: அரியானாவில் பயங்கர குற்றங்களில் ஈடுபட்டு தலைமறைவான பிரபல ரவுடி அபய் ராணா நேற்று போர்ச்சுக்கலில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அரியானாவை சேர்ந்த ரவுடி அபய் ராணா. அரியானாவில் பதிவு செய்யப்பட்ட பல குற்ற வழக்குகளில் அரியானா போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.

இந்த வழக்குகளில், கொலை, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல், உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தன. இவர் சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து தலைமறைவானார். வெளிநாட்டில் இருந்து கொண்டே தொழிலதிபர்களை மிரட்டி வந்துள்ளார். அவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

அபய் ராணா போர்ச்சுக்கல் நாட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள், ஒன்றிய வெளியுறவு துறை அதிகாரிகளின் உதவியுடன் போர்ச்சுகல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அபய் ராணாவை நாடு கடத்த கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில்,அபய் ராணாவை பிடிக்க அரியானா போலீசார் போர்ச்சுகல் சென்றிருந்தனர். அப்போது அரியானா போலீசாரிடம் ரவுடி அபய் ராணாவை போர்ச்சுகல் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதையடுத்து நேற்று விமானம் மூலம் டெல்லிக்கு அபய் ராணா அழைத்து வரப்பட்டார் என்று சிபிஐ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Related Stories: