ஐதராபாத்: ஒன்றிய உள்துறை இணையமைச்சராக இருப்பவர் பண்டி சஞ்சய் குமார். தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த இவரது மகன் பண்டி பகீரத். இவர் 17 வயது மாணவியுடன் பாலியல் ரீதியாக தொடர்பில் இருந்ததாக ஐதராபாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் ஒன்றிய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பகீரத் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர். 17 வயதுடைய அந்தப் மாணவியின் தாயார் அளித்த தகவலின்படி, தனது மகளுடன் உறவில் இருந்த சஞ்சய் குமாரின் மகன் பகீரத், அவளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார் என்று புகார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தனக்கு அறிமுகமான அந்த மாணவி, தன்னைத் தனது குடும்ப நிகழ்ச்சிகளுக்கும், நண்பர்கள் குழுவின் கூட்டங்களுக்கும் அழைத்ததாகக் கரீம்நகர் காவல்துறையினரிடம் பகீரத் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். நண்பர்கள் குழுவின் ஒரு பகுதியாகத் தானும், அந்த மாணவியும் அவர்களுடன் சென்று சில புனிதத் தலங்களுக்குத் தரிசனம் செய்ததாகப் பகீரத் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர், அந்தப் பெண்ணும் அவளது பெற்றோரும் தன்னை அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுமாறு மிரட்டியதாகவும், தான் அந்தத் திருமண முன்மொழிவை நிராகரித்ததாகவும், அதைத் தொடர்ந்து அப்பெண்ணின் பெற்றோர் பணம் கேட்டு மிரட்டியதோடு, பணம் கொடுக்காவிட்டால் தன் மீது பொய்ப் புகார்களை அளிப்பதாக அச்சுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பயத்தின் காரணமாக, தான் அப்பெண்ணின் தந்தையிடம் ரூ. 50,000 கொடுத்ததாகவும், ஆனால் அவர்கள் ரூ. 5 கோடி கேட்டதாகவும் பகீரத் தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளார். தான் அவர்கள் கோரிய தொகையை வழங்கத் தவறினால், அப்பெண்ணின் தாயார் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
