திருத்தணி, மே 7: திருத்தணி அருகே, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, பொன்பாடி பேருந்து நிறுத்தத்தில் நேற்று முன்தினம் மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் சென்ற வாலிபரை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். இதில், 30 மதுபாட்டில்களை பதுக்கி கடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து, பைக் மற்றும் மதுபாட்டில்களை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, விசாரணை நடத்தியதில், அவர் பொன்பாடி பகுதி மேட்டு காலனியைச் சேர்ந்த சின்னராசு(32) என்பதும், மத்தூர் பகுதியில் ஒரு டாஸ்மாக் மதுபானக் கடையில் 30 மதுப்பாட்டில்களை வாங்கி, அதிக விலைக்கு விற்க பைக்கில் கடத்தியதும் தெரியவந்தது.
இதுகுறித்து, திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதுபாட்டில்கள் கடத்தி வந்த சின்னராசுவை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
