அரியலூர், மே 6: அதிகளவு வெப்பம், வறட்சியிலிருந்து பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளார். நடப்பாண்டு மே முதல் ஜூலை மாதம் வரை வெப்ப அலைவீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அதிகளவு வெப்பம் மற்றும் வறட்சி நிலவும். எனவே, மேற்கண்ட நிலையினை எதிர்கொள்ளும் வகையில், விவசாயிகள் தங்களது பயிர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
நண்பகல் நேரங்களில் அதிகளவில் வெப்ப அலைவீசக்கூடும் என்பதால், நண்பகல் 12 மணிமுதல் 3 மணி வரை வயல்வெளியில் பணிகள் மேற்கொள்வதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். நிலத்தடிநீர் குறையும் அபாயம் உள்ளதால், தற்போது உள்ள நீரினை தேவைக்கு அதிகமாக செலவிடாமல் முறையாக பயன்படுத்தவேண்டும். பாசனநீர் வீணாவதை தடுக்கும் வகையில், பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் முறை மூலம் காலை அல்லது மாலை நேரங்களில் நீர் பாய்ச்ச வேண்டும்.
பயிர்களிலிருந்து அதிகப்படியான நீர் ஆவியாகி வெளியேறுதலை தடுக்கும் வகையில், கயோலின் 3 மூட்டை அல்லது 2 மூட்டை அம்மோனியம் பாஸ்பேட் 1மூட்டை, பொட்டாசியம் குளோரைடை காலை அல்லது மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும். காய்கறி பயிர்களில் மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், பிளாஸ்டிக் நிலப்போர்வை அல்லது இயற்கை முறையில் வைக்கோல் உலர்ந்த இலை தழைகளை கொண்டு தழைக்கூளம் இடலாம். இம்முறையில் களை வளர விடாமல் தடுக்கு எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நிழல்வலைகள் இடுதல் அதிக வெப்ப அலைகளை தடுக்கவும், இலை கருகுவதை தடுக்கவும் நிழல் வலைகளை பயன்படுத்தலாம். அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரிய போன்ற உயிர் உரங்களை இடுவதன் மூலம் வெப்பத்தின் தாக்கத்தை கட்டுப்படுதவும் மற்றும் தோட்டக்கலை பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
தோட்டக்கலை பயிர்களை புதிதாக நடவு மேற்கொள்ளும் விவசாயிகள், வெப்பத்தினை தாங்கி வளரக்கூடிய ரகங்களை தேர்வு செய்து நடவுசெய்ய வேண்டும். மேலும், நிலப்போர்வை மற்றும் நுண்ணீர் பாசன முறையினை பின்பற்ற வேண்டும். பல்லாண்டு பயிர்களான தென்னை, மா, கொய்யா, பாக்கு போன்ற பயிர்களுக்கு முறையாக நுண்ணீர் பாசனம் அமைத்து, அங்கக நிலப்போர்வை மரங்களுக்கு அமைத்திடவேண்டும். அவ்வப்போது பயிர்களில் ஏற்படும் மாற்றத்தினை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
