×

மானாமதுரையில் பரிதாபம் கட்டிடம் இடிந்து தொழிலாளி பலி

மானாமதுரை, மே 7: மானாமதுரையில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து, தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மானாமதுரை அன்னவாசல் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா(57). இவர் கட்டுமான தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மானாமதுரை அழகர் கோயில் தெருவை சேர்ந்த சந்துரு என்பவரது வீட்டின் பின்புறத்தில் பழைய கழிப்பறையை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியில் கருப்பையா ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கழிப்பறையின் பழைய சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அதன் இடிபாடுகளுக்குள் சிக்கிய கருப்பையா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய கருப்பையாவின் உடலை மீட்டனர். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பான புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Manamadurai ,Karuppaiya ,Annavasal ,Alagar Koil Street ,Manamadurai… ,
× RELATED சித்தோட்டில் நகை திருடிய வாலிபர் கைது