×

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள்: த.வெ.க முன்னிலை; அதிமுக, திமுகவுக்கு பின்னடைவு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதல் தவெக முன்னிலை பெற்று வந்தது.அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்தன. குறிப்பாக சென்னையில் தவெக மொத்தமாக முன்னிலை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் கடந்த மார்ச் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. புதுச்சேரி, கேரளா அசாமில் கடந்த ஏப்.9ம் தேதியும், தமிழகத்தில் ஏப். 23ம் தேதியும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் ஏப்ரல் 23ம்தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாதக என நான்கு முனைப் போட்டியுடன் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக-பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி என இருபெரும் அணிகளுடன், தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சிகளும் தனித்து களம் கண்டன. இதுதவிர ராமதாஸ்- சசிகலா இணைந்து ஒரு கூட்டணியை அமைத்து போட்டியிட்டனர். இருப்பினும் 4 முனை போட்டி ஏற்பட்டது. அதிலும், திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டியை காண முடிந்தது.

மேலும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுடன், சுயேச்சை வேட்பாளர்களும் சேர்ந்து மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இடைப்பாடி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியிலும் போட்டியிட்டனர்.

தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது முதல் அனைத்து கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம், ரோடு ஷோ என தமிழகம் முழுவதும் தேர்தல் திருவிழா களை கட்டியது. இதையடுத்து ஏப்.23ம்தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடந்த வாக்குப்பதிவில், மொத்தம் 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்தனர். மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில், 1,06,408 வாக்குப்பதிவு இயந்திரங்கள், தலா 75,064 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது.

அனைத்து தொகுதிகளிலும் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில், இதுவரை இல்லாத அளவாக 85.15% வாக்குகள் பதிவாகி இருந்தன. இதன் மூலம் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் புதிய வரலாற்று சாதனையை படைத்திருந்தது. வாக்குப் பதிவு முடிந்ததும் அவை அனைத்தும் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டன. 62 மையங்களிலும் 65 கம்பெனி துணை ராணுவப் படையினர், 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் என 234 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை
பணியாளர்கள், வேட்பாளர்கள், முகவர்களுக்கு க்யூஆர் கோடு வசதி மற்றும்புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. 62 மையங்களில் மொத்தம் 234 வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள், போலீசார், முதியோர், மாற்றுத் திறனாளிகள் என 8.15 லட்சம் பேர் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர். 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேஜை வீதம் அமைக்கப்பட்டிருந்தது.

மொத்தம் 10,545 பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரத்யேக க்யூஆர் கோடு உள்ள அடையாள அட்டையின் அடிப்படையில் மட்டுமே வாக்கு எண்ணிக்கை பணியாளர்கள், வேட்பாளர்கள், முகவர்களை வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்தல் நடத்தும் அலுவலரைத் தவிர, வேறு யாரும் வாக்கு எண்ணிக்கை கூடத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதை தொடர்ந்து மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்களின் பதிவான வாக்குகள் சுற்றுக்கள் அடிப்படையில் எண்ணப்பட்டன.

காலை 11 மணி நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் 112 இடங்கள் பெற்று முன்னிலை பெற்றது. அதிமுக 71 இடங்களும், திமுக 51 இடங்களும் பெற்றனர். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழக அரசியலில் எப்போதும் திமுக அல்லது அதிமுக ஆகிய இரு கட்சிகளில் ஒன்று ஆளுங்கட்சியாகவும், மற்றொன்று பலமான எதிர்க்கட்சியாகவும் இருந்து வந்துள்ளன. ஆனால், இன்று இரண்டு கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் தவெக வந்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், தமோ.அன்பரசன், எ.வ.வேலு, கே.ேக.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், காந்தி, பழனிவேல் தியாகராஜன், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து பின்னடவை சந்தித்து வருவது தமிழக அரசியல் களத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tamil Nadu Assembly Election ,Chennai ,Tamil Nadu ,Tamil Nadu Assembly ,Adimuka ,Dimuka ,Puducherry, ,Kerala ,West ,
× RELATED தட்டாஞ்சாவடியில் வெற்றி பெற்ற...