கள நிலவரத்தை நேரில் பார்த்து அறிந்தேன் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தொடரும்: விஜய் பெயரால் சூதாட்டம் நடக்கிறது திருமாவளவன் பரபரப்பு பேட்டி

 

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தமிழக சட்டசபை தேர்தல் முடிந்ததும் ஓய்வுக்காக பெங்களூரு சென்றிருந்தார். நேற்று மதியம் அவர் பெங்களூருவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னைக்கு திரும்பி வந்தார். விமானநிலையத்தில் திருமாவளவன் அளித்த பேட்டி: தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவை, திமுக கூட்டணி வெற்றி பெற்று, திமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளன. ஆனால் ஒரு சில நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் அதற்கு நேர்மாறான கருத்துகளை கூறியுள்ளன. நான் களத்தில் நேரடியாக மக்களை சந்தித்த விதத்தில், இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, மகத்தான வெற்றியை பெற்று, திமுக தனித்து ஆட்சியை அமைக்கும். தேர்தலில் விசிகவினர் சரிவர கூட்டணி கட்சிக்கு தேர்தல் பணியாற்றவில்லை என்று கூறியது, எங்களுடைய கட்சிக்காரர்களுக்காக பேசியது. அதை சிலர் ஊதி பெரிதுபடுத்துகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியை, குறிவைத்து திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக, தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அவர்கள் முயற்சியில் மண் விழுந்து விட்டது. அவர்கள் ஆசை நிறைவேறவில்லை. திமுக கூட்டணியை சிதறடிக்க எத்தனையோ பகீரத முயற்சிகளை மேற்கொண்டனர். அத்தனை முயற்சிகளையும் முறியடித்தது, எங்களுடைய விடுதலை சிறுத்தைகள் கட்சி. மீண்டும் அவர்கள் ஏமார்ந்து போவார்கள்.

தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை அமையும். விஜய் ஆட்சியைப் பிடிப்பார் என்று அனைத்து நிறுவனங்களும் கருத்துக்கணிப்புகள் வெளியிடவில்லை. வட இந்தியாவை சேர்ந்த ஆர்எஸ்எஸ் பின்னணி, பாஜ ஆதரவு, வலதுசாரி இயக்கங்களை சேர்ந்தவர்கள் அவ்வாறு கருத்துகளை வெளியிடுகின்றனர். விஜய் பெயரில் ஏராளமான பெட்டிங்கள், சூதாட்டங்கள் நடக்கிறது. இந்த சூதாட்ட கும்பல் கிளப்புகிற வதந்தி தான் இது. தேர்தலுக்கு முன்பு திமுகவை முன்வைத்து, சூதாட்டத்தை நடத்தினர். அகில உலக அளவில் அது நடந்தது. இப்போது தேர்தல் வாக்குப் பதிவுக்கு பின்பு, விஜய்யை முன்வைத்து இந்த சூதாட்ட காய்களை நகர்த்துகின்றனர். தேர்தல் முடிவுகளுக்குப் பின்பு அவர்கள் ஏமாந்து போவார்கள். முன்னாள் டிஜிபி என்பதால், ஒரு போலீஸ் அதிகாரி, விஜய்க்கு ஆதரவாக கூறுவது சரியாகிவிடுமா? இது முழுக்க முழுக்க 100% பெட்டிங் தான். சூதாட்ட நடவடிக்கைக்காக எடுக்கப்படும் மீடியா கைஃப். நாளை தேர்தல் முடிவு வரப் போகிறது. அப்போது பாருங்கள். தொங்கு சட்டசபை தமிழ்நாட்டில் அமையாது. நேரடியாக நான் 40க்கும் மேற்பட்ட தொகுதிகளை பார்த்த அனுபவத்தில் கூறுகிறேன். மக்களிடம் ஒரு எழுச்சி
ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணி வெற்றி பெறும், திமுக தனித்தே ஆட்சி அமைக்கும்.

சோசியல் மீடியா விஜய்யை மிகவும் உயர்த்திப் பிடிக்கின்றனர். ஒவ்வொரு புதிய கட்சிகள் தொடங்கும் போதும், அல்லது நடிகர்கள் கட்சிகளுக்கு வரும்போதும், இதேபோல் கூட்டம் கூடுவது வழக்கம் தான். ஆனால் நடிகர் விஜயகாந்த் வந்த போது, இந்த அளவு சோசியல் மீடியா இல்லை. வைகோ, ராமதாஸ் கட்சி தொடங்கிய போது சோசியல் மீடியா இந்த அளவு கிடையாது. இப்போது அதிகமான சோசியல் மீடியாக்கள் வந்து விட்டன. அந்த சோசியல் மீடியாக்கள் தான் உயர்த்தி பிடித்து, இதுபோன்ற ஒரு நிலையை உருவாக்குகின்றனர். இளைஞர்கள் நிறைய பேர், இளைய தலைமுறையினர், விஜய்க்கு எதிராக, இந்த தேர்தலில் வாக்களித்து இருக்கின்றனர். ஆனால் அதையெல்லாம், சோசியல் மீடியாக்கள் பெரிது படுத்துவதோ, கூறுவதோ கிடையாது. 100% இளைஞர்கள் விஜய்யை ஆதரிக்கவில்லை. எதிர்ப்பாக ஏராளமான இளைஞர்கள், இளைய தலைமுறையினர் இருக்கின்றனர். ஆனால் அதை பெரிதுபடுத்தாமல், ஒருவரை மட்டும் ஹீரோவாக்கி, அவருக்கு பின்னால் இருப்பதை மட்டுமே, பெரிதுபடுத்திக் கொண்டு வருகிறது இந்த சோசியல் மீடியாக்கள். இதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

 

Related Stories: