விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி மலைக்கு கிளம்பினார் அழகர்: பூப்பல்லக்கில் எழுந்தருளி ஆயிரக்கணக்கானோருக்கு தரிசனம்

மதுரை: மதுரை சித்திரை திருவிழா முடிந்து மீண்டும் மலைக்குக் கிளம்பினார் அழகர். விடிய விடிய நடந்த பூப்பல்லக்கில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சித்திரைத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான அழகர் வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் கடந்த 1ம் தேதி இறங்கினார். பல லட்சம் பக்தர்கள் குவிந்ததில், மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது. 2ம் தேதி காலை சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் காட்சி அளித்தார். தொடர்ந்து கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இரவில் அழகர் மீண்டும் ராமராயர் மண்டகப்படிக்கு வந்தார். அங்கு இரவு 11 மணிக்கு துவங்கி, நேற்று (மே 3) காலை வரை விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது. மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகினி அவதாரம் ஆகிய திருக்கோலங்களில் அழகர் காட்சி அளித்தார். தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு மோகினி அவதாரக் கோலத்தில் அழகர் வீதி உலா வந்தார்.

நேற்று பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளினார். இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி இன்று (மே 4) அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் எழுந்தருளி, அதே கோலத்தில் கருப்பணசாமி கோயில் சன்னதியில் இருந்து அழகர் மலைக்கு புறப்பட்டார். தொடர்ந்து, மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக நாளை (மே 5) காலை 10.40 மணிக்கு மேல் 11.10 மணிக்குள் மீண்டும் தனது இருப்பிடமான அழகர்மலைக்குச் சென்று சேர்கிறார். 6ம் தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.

* தடம் பார்த்த அழகர்
ஆழ்வார்புரம் ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய அழகரின் தசாவதாரம் நிகழ்ச்சி நேற்று அதிகாலை வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து அழகர் ராமராயர் மண்டபத்தில் ராஜாங்க திருக்கோலத்தில் தங்கப்பல்லக்கான அனந்தராயர் பல்லக்கில் காலையில் தல்லாகுளம் நோக்கி புறப்பட்டார். மதிச்சயம் மூங்கில் கடை தெரு வழியாக வந்த அழகர் வைகையாற்றுக்குள் இறங்கி வந்த பாதையை திரும்ப காணும் வகையில் ‘தடம்’ பார்த்தார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா… கோவிந்தா…’ என கோஷமிட்டு வழிப்பட்டனர். தொடர்ந்து அழகர் தல்லாகுளம் புறப்பட்டார்.

Related Stories: