தொடர் விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.3.44 கோடி வருவாய்: போக்குவரத்து கழகம் தகவல்

 

சென்னை: தொடர் விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.3.44 கோடி வரை வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது. மே தினம், சித்ரா பவுர்ணமி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக கடந்த 30-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.3 கோடியே 44 லட்சத்து 44 ஆயிரத்து 52 வருவாய் கிடைத்துள்ளது. சிறப்பு பஸ்கள் மொத்தம் 6 லட்சத்து 55 ஆயிரத்து 593 கிலோ மீட்டருக்கு இயக்கப்பட்டன. ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.52.54 என்ற அளவில் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது. இது அரசு விரைவு போக்குவரத்து கழக வரலாற்றில் ஒரு கிலோ மீட்டருக்கு ஈட்டப்பட்ட உச்சபட்ச வருவாய் ஆகும்.

முன்னதாக கடந்த 2023ம் ஆண்டு மே 22ம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டபோது ஒரு கிலோ மீட்டருக்கு ஈட்டிய வருவாய் ரூ.51.53 கிடைத்த நிலையில், தற்போது கூடுதலாக ரூ.1.01 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், “கடந்த 2023ம் ஆண்டு மே 22ம் தேதி முகூர்த்த நாள் வந்ததால் அதிகப்படியான பயணங்கள் இருந்தது. அப்போது கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது, ஆனால் தனியார் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த சூழலிலும் அரசு பேருந்துகளுக்கு அதிகப்படியான வருவாய் கிடைத்தது சாதனையாகவே பார்க்கப்படுகிறது” என்றனர்.

 

Related Stories: