அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது: 28ம் தேதி வரை நீடிக்கும்

 

சென்னை: அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் காலம் இன்று தொடங்கி 28ம் தேதி வரை நீடிக்கும். இந்த நாட்களில் வெயில் கொளுத்தும், ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், வேலூரில் நேற்று 109 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் நீண்ட கால அறிக்கையின்படி, இந்தியாவில் 11 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சூரிய வெப்பம் பூமியில் விழந்து வெளியேற முடியாமல் தரைப்பகுதியில் நிலை கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. கடந்த 150 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்ற ஒரு நிலை தற்போது உருவாகியுள்ளது. கடந்த 1877ம் ஆண்டில் நாட்டில் சூப்பர் எல்-நினோ ஏற்பட்டதால் 21 மாதங்கள் வெப்பம் நீடித்தது. அதேபோன்ற நிலை தற்போதும் உருவாகியுள்ளது. இதனால் பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து 113 டிகிரி வரை வெ யில் கொளுத்தும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காலை 11 மணி முதல் மாலையில் 4 மணி வரையில் பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் இருந்து வீசிய காற்றின் காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மாலை மாவட்டங்கள் தொடங்கி தெற்கு கர்நாடகா வரையில் உள்ள பகுதிகள், தென் மாவட்டங்களில் கன்னியாகுமரி திருநெல்வேலி மாவட்டங்களிலும், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி பகுதிகளிலும் நேற்று கனமழை பெய்துள்ளது. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் தெ ாடர்ச்சியாக இன்றும் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கும். மேலும், வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல்களில் இரு வளி மண்டல காற்று சுழற்சி உருவாகும் சூழல் உருவாகியுள்ளது. அதற்கு முன்னோட்டமாக இலங்கை பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது வட மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடற்கரையை கடந்து மேற்கு நோக்கி பயணித்து அரபிக் கடல் பகுதிக்கு செல்லும் என்பதால் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உருவாகியதால் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று பெய்துள்ளது.

இந்த நிகழ்வு உருவாவதற்கு முன்பே அரபிக் கடலில் ஒரு காற்று சுழற்சி உருவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடல் நிகழ்வு தமிழகத்தை நெருங்கி வருமா, விலகிச் செல்லுமா என்ற சந்தேகத்துக்கு இடையே, நல்ல மழை தமிழகத்தில் பெய்யும் என்று உறுதியாகியுள்ளது. இந்த மழை 3வது வாரம் வரையில் நீடிக்கும். இந்நிலையில், இன்றும் சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வானம் மேகம் சூழ்ந்்து காணப்படும். அதன் காரணமாக உயர் அடுக்கு மேகம் வெயிலை தடுத்துக் கொண்டு இருப்பதால் வெப்ப சலனம் ஏற்பட்டு வெப்பச் சலன மழை பெய்யும். படிப்படியாக மழை பெய்யும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. வங்கக் கடல் நிகழ்வு இலங்கை அருகே உருவாகியுள்ளது. மே மாதம் இது போன்ற நிகழ்வு உருவாவது அரிதான ஒன்று. இந்நிலையில், அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் காலம் தமிழகத்தில் இன்று தொடங்கி 28ம் தேதி வரை நீடிக்கும். இந்த நாட்களில் வெயில் கொளுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முன்னோட்டமாக தமிழகத்தில் கடந்த மாதம் தொடங்கி தற்போது வரையில் வெப்பம் அதிகரித்து அதன் தொடர்ச்சியாக வெயிலும் கொளுத்தி வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 106 டிகிரி வரையில் வெயில் அதிகரித்துள்ளது.

தற்போது உருவாகியுள்ள கத்தரி வெயில் காரணமாக வெயில் சுட்டெரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது கோடை மழை பெய்வதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால் அக்னி நட்சத்திர பாதிப்பு குறைவாக இருக்கும் என்றாலும் புழுக்கம் அதிகமாக இருக்கும். சில இடங்களில் அனல் காற்று வீசும். மாலையில் மழை பெய்து குளிர்விக்கும் நிலை உருவாகியுள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யும். வெப்பத்தை தணிக்க அதிக தண்ணீர் குடிப்பதும், பழரசங்கள், மோர், உள்ளிட்ட குளிர்ச்சியான நீர் ஆகாரத்தை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. குறிப்பாக மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவியது. வேலூரில் அதிகபட்சமாக 109 டிகிரி வெயில் கொளுத்தியது. திருத்தணி 107 டிகிரி, சென்னை, ஈரோடு 106 டிகிரி, கரூர், திருப்பத்தூர், தர்மபுரி 104 டிகிரி வெயில் நிலவியது.

வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக இருந்தது. இதற்கிடையே, வளி மண்டலத்தில் சுமார் 1.5 கிமீ உயரத்தில் தெற்கு சத்தீஸ்கர் முதல் குமரிக்கடல் வரை, தெலங்கானா, ஆந்திரா, மற்றும் தமிழ்நாடு வழியாக ஒரு வளி மண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, கரூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும். இதேநிலை 9ம் தேதி வரை நீடிக்கும். அதிகபட்ச வெப்பநிலை குறிப்பிடத்தக்க மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவு. ஒருசில இடங்களில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியசுக்கும் அதிகரித்து வெப்பநிலை காணப்படும். சென்னையில் வெயில் 106 டிகிரி வரை உயரவும் வாய்ப்புள்ளது. அதன் காரணமாக அசவுகரியம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

 

Related Stories: