- ஃபால்டா
- திரிணாமுல்
- பாஜக
- கொல்கத்தா
- அபிஷேக் பானர்ஜி
- பால்தா சட்டமன்ற தொகுதி
- மேற்கு வங்கம்
- டயமண்ட் ஹார்பர்
- மக்களவை
கொல்கத்தா: ஃபல்தா தொகுதிக்கு மறுதேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜகவிற்கு அபிஷேக் பானர்ஜி கடும் சவால் விடுத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் டைமண்ட் ஹார்பர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பல்தா சட்டசபை தொகுதியில், கடந்த ஏப். 29ம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. அப்போது வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக வேட்பாளரின் சின்னத்தை கருப்பு நிற டேப் மற்றும் மை கொண்டு மறைத்து முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. மொத்தம் உள்ள 285 வாக்குச்சாவடிகளில் 60 மையங்களில் இதுபோன்ற விதிமீறல்கள் நடந்ததாகவும், 53 ஆயிரத்து 967 வாக்காளர்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், தேர்தல் நடைமுறையில் முறைகேடு நடந்ததை உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து, பல்தா தொகுதிக்கு மட்டும் மே 21ம் தேதி மறுதேர்தல் நடத்தப்படும் என்றும், அதன் முடிவுகள் மே 24ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஒரு தொகுதிக்கு முழுமையாக மறுதேர்தல் நடப்பது மேற்கு வங்க வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, டைமண்ட் ஹார்பர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘எனது டைமண்ட் ஹார்பர் வியூகத்தை அசைத்துப் பார்க்க உங்கள் மேற்குவங்க எதிர்ப்பு குஜராத்தி கும்பலுக்கும், அவர்களின் ஏஜென்டாகச் செயல்படும் ஞானேஷ் குமாருக்கும் (தலைமை தேர்தல் ஆணையர்) 10 ஜென்மங்கள் எடுத்தாலும் முடியாது. உங்களின் மொத்த சக்தியையும் திரட்டி வாருங்கள். ஒன்றிய அரசிற்கே சவால் விடுகிறேன், நேராக பல்தாவிற்கு வாருங்கள்.
டெல்லியில் இருக்கும் உங்கள் பலமான தலைவர்களை அங்கு போட்டியிடச் சொல்லுங்கள். உங்களுக்குத் தைரியம் இருந்தால் ஃபல்தா தொகுதியில் களமிறங்குங்கள்’ என்று ஆவேசமாகச் சாடியுள்ளார். இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கானின் கூட்டாளிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
